உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சானி அபேசேகரவுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணை ஆவணங்களை மறைத்து வைக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், சி.ஐ.டியின் பிரதானி சானி அபேசேகரவுக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நியமனங்களை வழங்குமாறு கத்தோலிக்க சபை குறிப்பிட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட கருத்தை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி மறுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சானி அபேசகர, ரவி செனவிரத்ன ஆகியோரையே கோட்டபய ராஜபக்ஷ இடமாற்றம் செய்தார். முன்னர் விசாரணைகளை மேற்கொண்டவர்களை நியமிக்குமாறு கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. பெயர் குறிப்பிடாமல் சானி அபேசேகரவையும், ரவி செனவிரத்னவையும் நியமிக்குமாறே கத்தோலிக்க சபை தற்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சானி அபேசேகரவுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சானி அபேசேகரவை பதவி நீக்கம் செய்தார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு சானி அபேசேகரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் ஆவணங்களை மறைத்து வைக்குமாறு சானி அபேசேகரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி சானி அபேசேகர வழங்கும் விடயங்களை தான் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிடுகிறார். இவ்விருவரும் இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாக காண்பிப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்றார்