அல்பெர்ட்டாவில் (Alberta) நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கியூபெக்கைச் சேர்ந்த ஆர்சிஎம்பி அதிகாரி ஒருவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இணையம் வாயிலாகக் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அல்பெர்ட்டாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் பாதுகாப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த கியூபெக்கை தளமாகக் கொண்ட ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) அதிகாரி ஒருவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இணையத்தில் அச்சுறுத்தல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்சிஎம்பியின் கூற்றுப்படி, கியூபெக்கின் செயின்ட்-ஜீன்-சுர்-ரிச்செலியூ (St-Jean-sur-Richelieu) பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஈவன்சன் டுமெர்லஸ் (Evenson Dumerlus) என்ற அந்த அதிகாரி, தனது ஸ்னாப்சாட் (Snapchat) கணக்கில் அதிபருக்கு எதிராக “அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய கருத்துகளைக் கொண்ட” வீடியோ ஒன்றை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது விசாரணை நடந்து வருவதால், அச்சுறுத்தலின் தன்மையைக் காவல்துறையினர் வெளிப்படுத்தவில்லை.
காவல்துறை செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டபிள் மேரி-பியர் கெர்டின் (Marie-Pier Guertin) சிடிவி நியூஸிடம் (CTV News) கூறுகையில், இந்த குற்றச்செயல் 2025 ஜூன் 3 அன்று நடந்துள்ளதாகத் தெரிவித்தார். அந்த நேரத்தில், ஜி7 உச்சிமாநாட்டிற்கான தளப் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக அல்பெர்ட்டாவின் கனானாஸ்கிஸ் (Kananaskis) பகுதியில் டுமெர்லஸ் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
டிரம்பும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார், இம்மாநாடு 2025 ஜூன் 15 முதல் 17 வரை நடைபெற்றது.
“அவரது சக ஊழியரான மற்றொரு ஆர்சிஎம்பி அதிகாரி அந்த வீடியோவை உடனடியாகப் பார்த்துவிட்டு உடனே புகாரளித்தார், அதனால் விசாரணை அங்கேயே தொடங்கியது,” என்று கெர்டின் விளாக்கினார்.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்றும், அவர் தொடர்ந்து பணியிடை நீக்கம் (suspended) செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார். அதன்பின் ஆர்சிஎம்பியின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (Special Investigations Unit) இந்த விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.
“இவை மிகவும் நுணுக்கமான மற்றும் சிக்கலான விசாரணைகள் என்பதால், புலனாய்வாளர்களுக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய சிறிது காலம் எடுத்தது,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
டுமெர்லஸ் தற்போது அச்சுறுத்தல் விடுத்ததற்கான ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார், மேலும் அவர் ஜூலை 30 அன்று செயின்ட்-ஜீன்-சுர்-ரிச்செலியூ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
இணையத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைத் தங்களால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள ஆர்சிஎம்பி, இணையத்தில் மேற்கொள்ளும் நடத்தைகள் குற்றவியல் வழக்குகளுக்கு வழிவகுக்கும் என்பதைப் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
“காவல்துறை அதிகாரிகளாக, குறிப்பாக ஆர்சிஎம்பியில் உள்ள நாங்கள், எங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி, தொழில்முறைத் தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாகச் சமூக ஊடகங்களில் இது மிகவும் முக்கியமானது,” என்று கெர்டின் கூறினார்.
“இணையத்தில் எதைப் பதிவிடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள், ஏனென்றால் ஒரு கண நேரத் தவறு பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.”
இதுபோன்ற செயல்கள் குறித்து பொதுமக்கள் 514-939-8300 / 1-800-771-5401 என்ற எண்களின் மூலமாக ஆர்சிஎம்பிக்கும், தேசிய பாதுகாப்பு தகவல் வலையமைப்பிற்கும் (1-800-420-5805) அல்லது உள்ளூர் காவல் நிலையத்திற்கும் தெரிவிக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.