கடந்த 2009 ஆம் ஆண்டில் 228 உயிர்கள் ஒரே நேரத்தில் மாய்வதற்கு காரணமான ஏர் பிரான்ஸ் விமான விபத்து வழக்கில், விமான சேவை நிறுவனமும், ஏர்பஸ் விமான உற்பத்தி நிறுவனமும் மனிதநேயமற்ற முறையில் அலட்சியமாகச் செயல்பட்டுக் கொலைக் குற்றம் இழைத்துள்ளதாகப் பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரேசில், ரியோ டி ஜெனிரோவிலிருந்து பிரான்ஸ், பாரிஸ் நோக்கிப் பயணித்த ‘AF447’ என்ற பயணிகள் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு, இந்த இரு நிறுவனங்களுமே “முழுமையான மற்றும் தனிப்பட்ட பொறுப்பாளிகள்” என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ் நீதிமன்றம் ஒன்றினால் இந்த நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த எட்டு வாரங்களாக நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையின் முடிவில் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இரு நிறுவனங்களும் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருவதுடன், இத்தீர்ப்புக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
பிரெஞ்சு விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிக மோசமான இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 12 ஊழியர்கள் மற்றும் 216 பயணிகள் உட்பட அனைவரும் 38,000 அடி உயரத்தில் இருந்து கடல் பகுதிக்குள் விழுந்து பலியாகியுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலுக்கடியில் நடத்தப்பட்ட அதிதீவிரத் தேடுதல்களுக்கு மத்தியில், இரண்டு வருடங்களின் பின்னரே (2011 இல்) இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, இரு நிறுவனங்களுக்கும் தலா 225,000 யூரோக்கள் ($261,720 டாலர்கள்) என்ற அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வளவு பெரிய மனிதப் பேரழிவிற்கு இந்த அபராதத் தொகை மிகவும் குறைவானதாக விமர்சிக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பிரெஞ்சு புலனாய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, விமானத்தின் வேகத்தைக் கணிக்கும் சென்சார்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழத் தொடங்கியபோது, அதற்கேற்ப துரிதமாகச் செயற்படத் தவறிய விமானிகளின் அனுபவக் குறைபாடும் இந்த விபத்திற்கு முதன்மைக் காரணங்களாகக் கண்டறியப்பட்டன.
பனிப்புயலில் சிக்கியபோது சென்சார்கள் தவறான வேகக் குறியீட்டைக் காட்டியதால் குழப்பமடைந்த விமானிகள், விமானத்தின் மூக்குப் பகுதியை கீழ்நோக்கித் திருப்புவதற்குப் பதிலாக தவறுதலாக மேல்நோக்கி உயர்த்தியதால் விமானம் கடலுக்குள் மூழ்கியது.
இந்த விபத்திற்குப் பிறகு, சர்வதேச அளவில் விமானிகளுக்கான பயிற்சி முறைகள் மேம்படுத்தப்பட்டதுடன், அனைத்துப் பழைய வேக சென்சார்களும் புதிய தொழில்நுட்பக் கருவிகளாக மாற்றியமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.