பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியிலுள்ள ‘கலுவல’ நீர்வீழ்ச்சியில் (Kaluwala Waterfall) புதன்கிழமை (20) பிற்பகல் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவன், நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லியன்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை, பிந்துனுவெவ – மீரியகஸ் சந்தை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இவ்விளைஞன் தனது நண்பர்கள் ஐவருடன் இணைந்து அம்பதண்டேகம கலுவல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தையடுத்து, பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து குறித்த இளைஞனை மீட்டு மேலே கொண்டு வந்ததோடு, ‘சுவசரிய’ (1990) ஆம்புலன்ஸ் வண்டி மூலம் தியத்தலாவை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து லியன்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.