சென்னை:
“திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதாகப் பரப்பப்பட்டவை முற்றிலும் பொய் செய்திகள்; தற்போது ஐந்து கட்சிகளின் கால்களில் விழுந்து தவெக அமைத்துள்ள இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியின் நடனம் சில காலம்தான்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதியுள்ள அதிரடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் திருப்பங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இதுபோன்ற தேர்தல் பின்னடைவுகளைச் சந்தித்து மீண்டு வந்தவர்கள்தான். 2026 தேர்தலில் நாம் வெல்லவில்லை என்றாலும், நாம் முழுமையாக வெற்றி வாய்ப்பை இழக்கவில்லை. நாம் தனித்து 21.21 விழுக்காடு வாக்குகள் பெற்று, கூட்டணி பலத்துடன் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இந்தத் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் மக்கள் முழு பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை. இதனால், தூய சக்தி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் தவெக, தன்னைத் காப்பாற்றிக்கொள்ளத் திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், அத்தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி அதிமுகவின் முதுகில் குத்தியுள்ளது” எனத் தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், திமுக-உடனான கூட்டணி வதந்திகள் மற்றும் கட்சித் தாவல் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கப்போவதாக டிசைன் டிசைனாகக் கற்பனைச் செய்திகளைப் பரப்பினார்கள். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று மக்களும் நமது நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள். ஆனால், தவெக நமது கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும் ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, அதிமுக என்னும் கம்பீரமான ஆலமரத்தின் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தையே வெட்டப் பார்க்கிறார்கள். அவர்கள்தான் கீழே விழுந்து உருக்குலைவார்களே தவிர, இயக்கத்திற்கு எந்தத் தீங்கும் வராது” என்று எச்சரித்துள்ளார்.
“கழக நிறுவனர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் முதல் இன்றுவரை இயக்கத்திற்குத் துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அவர்கள் திருந்தினால் தாயுள்ளத்துடன் மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் நமக்குத் தெரியும். நமது கட்சியிலும் பிரச்சினை இருப்பின் அதை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம். வீட்டில் பூச்சியாக வீழ்ந்து விடாமல் அனைவரும் ஒன்று கூடுவோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரை அரசு சில காலமே நீடிக்கும். விரைவில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையும்; நாளை நமதே, இந்த நாடும் நமதே!” என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தொண்டர்களுக்குப் பேரெழுச்சி ஊட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் செம்மலையின் விலகலைத் தொடர்ந்து, இபிஎஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
#EdappadiPalaniswami #ADMK_Statement #EPSvsVijay #BreakingNews #May18 #TamilNaduPolitics #TVK_Government #PoiKaalKuthirai #AlliancePolitics #DMK_Rumors #MGR_Legacy #JayalalithaaWay #PoliticalCrisisTN #ADMK_Thondargal #ThalapathyVijay #NewGovernmentTN #TNAssembly2026 #BetrayalInPolitics #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`