விலங்கு வதை (Animal cruelty) குறித்த விசாரணையில், காவல்துறையினர் சுமார் 60 பூனைக்குட்டிகளையும் எட்டு வளர்ந்த பூனைகளையும் மீட்டதைத் தொடர்ந்து, மிசிசாகாவைச் (Mississauga) சேர்ந்த நபர் ஒருவர் 130 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் விலங்கு வதை குறித்த விசாரணையின் போது, காவல்துறையினர் 57 பூனைக்குட்டிகளையும் எட்டு வளர்ந்த பூனைகளையும் மீட்டதைத் தொடர்ந்து, மிசிசாகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 130 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாகப் பீல் (Peel) பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பூனைக்குட்டிகள் மிகவும் ஆபத்தான மற்றும் துயரரமான சூழ்நிலைகளில் விற்கப்பட்டதாகவும், பின்னர் அவை தங்களது புதிய வீடுகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாகவே காயங்கள் காரணமாக உயிரிழந்ததாகவும்” கிடைத்த பல புகார்களை அடுத்து, கடந்த ஏப்ரல் 1 அன்று இந்த விசாரணை தொடங்கப்பட்டதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், எத்தனை பூனைக்குட்டிகள் இறந்தன அல்லது அவை எவ்வாறு காயமடைந்தன என்பது குறித்த துல்லியமான விபரங்களைக் காவல்துறையினர் வெளியிடவில்லை.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 23 அன்று, பீல் பிராந்திய புலனாய்வாளர்கள் விலங்கு நலச் சேவையின் (Animal Welfare Services) முக்கிய சம்பவ மேலாண்மைக் குழுவுடன் இணைந்து சோதனையிடுவதற்கான நீதிமன்ற உத்தரவைப் (Search warrant) பெற்றுச் சோதனையிட்டனர்.
இந்தச் சோதனையின் போது, அந்த வளாகத்தில் இருந்து 57 பூனைக்குட்டிகளும் எட்டு வளர்ந்த பூனைகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் அவசர கால்நடை சிகிச்சைக்காக உடனடியாக விலங்கு மீட்பு மையம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விசாரணையின் முடிவில், மிசிசாகாவைச் சேர்ந்த 38 வயதான சியாங் யு (Qiang Yu) என்பவருக்கு எதிராக, கனடாவின் குற்றவியல் சட்டத்தின் (Criminal Code of Canada) கீழ் விலங்குகளுக்குத் தேவையற்ற துன்புறுத்தல்களை விளைவித்ததாக 134 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும், சந்தேக நபரான சியாங் யு பிணை விசாரணை (Bail hearing) வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை வேறு எந்த விலங்குகளும் அங்கு மீட்கப்படாமல் எஞ்சியிருக்கவில்லை என்று தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள், மீட்கப்பட்ட அனைத்து விலங்குகளும் தற்போது மிசிசாகா விலங்கு பராமரிப்பு இல்லம் ஒன்றின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்