தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, மொழி வளர்ச்சி மற்றும் அரசின் சாதனைகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியப் பிரிவாக விளங்கும் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறையின் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமை தாங்கி, துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மொழியியல் திட்டங்களின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவான மறுஆய்வு நடத்தினார்.
அரசின் கொள்கைகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக மாநிலத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் செய்தி மக்கள் தொடர்புத் துறை ( Information and Public Relations Department ) முக்கியப் பங்காற்றுகிறது. இந்தத் துறையின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு விளம்பரப் பரப்புரைகள், அரசு விழாக்கள் மற்றும் மக்கள் தொடர்புப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், நவீனத் தகவல் தொழில்நுட்பக் காலத்திற்கு ஏற்ப, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி அரசின் சாதனைகளை மிகவும் எளிய முறையில் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான புதிய உத்திகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழைத் தமிழ்நாட்டின் அனைத்து மட்டங்களிலும் முதன்மை மொழியாக மாற்றுவதற்கும், உலக அளவில் அதன் பெருமையைப் பரப்புவதற்கும் தமிழ் வளர்ச்சித் துறை ( Tamil Development Department ) பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.