ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; வௌியான புதிய தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவிற்குச் சொந்தமான வீட்டின் CCTV கமரா தொகுதியில் தரவுகள் சேமிக்கப்படவில்லை என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குறித்த வீட்டின் பாதுகாப்பு கமரா தொகுதி இயங்கும் நிலையில் இருந்தபோதிலும், அதில் தரவுகள் பதிவு செய்யப்படுவதில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் இரண்டாம் நாள் சாட்சி விசாரணை  கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நடைபெற்றது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், கோட்டை நீதவான் பசன் அமரசேனவிடம் மேலதிக அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளனர்.

உயிரிழந்த கபில சந்திரசேனவின் மனைவிக்குச் சொந்தமான வீடு ஒன்றை, நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த 12ஆம் திகதி சோதனையிட்டதாகவும், அந்த வீட்டில் இருந்து 02 மடிக்கணினிகள் மற்றும் சில கோப்புகளை வழக்கு ஆவணங்களாகத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் நீதவானிடம் தெரிவித்தனர்.

இதன்போது, “உயிரிழந்தவர் சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் இருந்த அனைத்து CCTV கேமரா காட்சிகளும் தற்போது விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனவா?” என நீதவான் விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த விசாரணை அதிகாரி, குறித்த வீட்டின் CCTV கேமரா அமைப்பு இயங்கும் நிலையில் இருந்தபோதிலும், அதில் தரவுகள் சேமிக்கப்படுவதில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே, அந்த வீடு தொடர்பாக விசாரணைக்கு பயன்படுத்தக்கூடிய CCTV காட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், ஆனால் அருகில் உள்ள 02 வீடுகளின் CCTV கேமரா அமைப்புகளிலிருந்து 2026 மே 06 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி பகல் வரையிலான காலப்பகுதிக்குரிய முன் மற்றும் பக்கவாட்டுக் காட்சிகள் அடங்கிய தரவுகளைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இதன்போது, உயிரிழந்தவர் தங்கியிருந்த வீட்டில் எத்தனை நுழைவாயில்கள் உள்ளன? என நீதவான் மீண்டும் வினவினார்.

குறித்த வீட்டிற்குள் நுழைவதற்கு ஒரேயொரு நுழைவாயில் மாத்திரமே இருப்பதாகப் பதிலளித்த விசாரணை அதிகாரி, வீட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் நபர்கள் தொடர்பான காட்சிகள் தற்போது தமது பொறுப்பில் உள்ள CCTV தரவு அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் இரண்டாம் நாள் சாட்சிப் பதிவு ஆரம்பமானது.

அங்கு, அரவிந்த டி சில்வா அவர்களின் வீட்டின் அறை ஒன்றிற்குள் கபில சந்திரசேன உயிரிழந்து கிடந்த காட்சியை முதன்முதலில் பார்த்திருந்த சட்டத்தரணி பிரியந்த அமரசிங்க சாட்சியமளித்தார்.

சுவாமி, 2026 மே மாதம் 08 ஆம் திகதி நான் அரவிந்த டி சில்வா அவர்களின் வீட்டிற்குச் சென்றது அதற்கு முதல் நாள் இரவு ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன அவர்கள் விடுத்த அறிவித்தலுக்கு அமைவாகவே ஆகும்.

முதல் நாள் இரவு 9.30 மணியளவில் ரியன்சி சார் எனக்கு அழைத்து, ‘கபில சந்திரசேனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டியுள்ளது. சாருடைய அலுவலகத்தில் மனு தயார் செய்யப்பட்டுள்ளது.

அதிகாலையிலேயே சென்று மனுவைத் தாக்கல் செய்து, சார் வரும் வரை வழக்கைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோருங்கள்’ எனக் கூறினார்.

அத்துடன் ‘கபில விளக்கமறியலில் வைக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார், எனவே நேரில் சென்று கபிலவைச் சந்தித்து, இந்த மனு பிடியாணையைத் திரும்பப் பெறுவதற்காகவே தாக்கல் செய்யப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துங்கள்’ என்றும் கூறினார்.

பின்னர் அன்று இரவு 11 மணியளவில், திரு. ரியன்சி பேசச் சொன்னதாகக் கூறி அரவிந்த டி சில்வா எனக்கு அழைப்பு விடுத்தார். அந்த நேரத்தில் கபிலவும் அங்கிருப்பதாக அரவிந்த என்னிடம் கூறினார். ’31 ஆ அல்லது 21 ஆ எனத் தெரியவில்லை, ஏதோ ஒரு சட்டப் பிரிவு பற்றி கபில எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறார்,

அதைக் கூறிக்கொண்டே விளக்கமறியலில் வைக்கப்படுவோம் எனப் பயப்படுகிறார்’ என்றும் அரவிந்த என்னிடம் சொன்னார். பின்னர் நான் அரவிந்தவிடம், மறுநாள் காலை 7.15 மணியளவில் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் எனக் கூறினேன்.

மறுநாள் காலை 7.15 மணியளவில் வீட்டிற்குச் சென்று அழைப்பு விடுத்த பின்னரே அரவிந்த நித்திரையிலிருந்து எழுந்தார். நான் வீட்டிற்குள் சென்றபோது, அரவிந்த மேல் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவாறே, நான் கபிலவுக்கு அழைத்தேன், அவர் பதில் அளிக்கவில்லை’ என்று கூறிக்கொண்டே வந்தார். பின்னர் நான் ‘கதவைத் தட்டிப் பாருங்கள் எனக் கூறினேன்.

அரவிந்த மேலே சென்று கதவைத் தட்டிவிட்டு வந்து, ‘கதவைத் திறக்கவில்லை’ என்று சொன்னார்.

அதன் பிறகு நானும், அரவிந்தவும், அவரது மனைவியும் மேலே சென்றோம். அரவிந்த குளியலறைக்குச் சென்றபோது, நான் அவரது மனைவியிடம் ‘வேறு சாவி இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவர் அந்த சாவியைக் கொண்டு வந்து கதவைத் திறந்தார்.

அப்போது நேரம் காலை 7.35 இருக்கும். கதவைத் திறந்தவுடனேயே, கட்டில் விரிப்பு சுருண்டு கிடப்பதைக் கண்டேன். கட்டிலில் எவரும் இல்லாததால் இடதுபுறமாகப் பார்த்தேன். அங்கு கதவின் மேல் பகுதியில் டை போன்ற ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது.

அதற்கு கீழே தரையில் நீல நிறம் போன்ற ஒரு கதிரையின் மேல் வழுக்கை விழுந்த தலை ஒன்றைக் கண்டேன். கதவின் மேலே இருந்த பட்டையின் ஒரு பகுதி கழுத்திலும் இருப்பதை அவதானித்தேன்.

பின்னர் நான் அரவிந்தவின் மனைவியைக் கையால் பின்னுக்குத் தள்ளிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தேன். அந்த நேரத்தில் அரவிந்த அங்கு வந்தார். நான் அரவிந்தவிடம் ‘இறந்துவிட்டது போலத் தெரிகிறது.

உங்களுக்கு தெரிந்த ஒரு வைத்தியருக்கு அழையுங்கள் எனக் கூறினேன். அதைக் கேட்டவுடன் அவரும் அச்சமடைந்ததை நான் கண்டேன்.

பின்னர் அவர் அழைப்புகளை எடுக்கும்போது மிகவும் பதற்றமாக இருந்ததை என்னால் காண முடிந்தது.

அதனைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்த கபில சந்திரசேன அவர்களின் உடலை முதன்முதலில் பரிசோதித்த தனியார் வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் யசோதா லக்ஷானி லியனகே, மரண விசாரணை தொடர்பான சாட்சியத்தை வழங்கினார்.

மே மாதம் 08 ஆம் திகதி காலை 7.45 மணியளவில் எமது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கிடைத்த அழைப்பிற்கு இணங்க, ஊழியர்கள் சிலருடன் காலை 7.50 மணியளவில் நான் அந்த இடத்திற்குச் சென்றேன்.

சட்டத்தரணி எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் எம்மை ஒரு படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கட்டில் காலியாக இருந்தது. இடதுபுற மூலையில் ஒரு கதவு இருந்தது. கதவுக்கு முன்னால் ஒரு கதிரை கதவை நோக்கியவாறு வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரு நபர் விழுந்து கிடந்தார்.

பின்னர் அந்த நபருக்கு உயிர் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள உயிர் அறிகுறிகளை பரிசோதித்தேன். சுவாசம் நின்றிருந்ததுடன், முகத்தின் ஒரு பகுதி கதிரையில் அழுந்திய நிலையில் காணப்பட்டது.

நாடித்துடிப்பும் நின்றிருந்தது. எனது பக்கமாக விழுந்து கிடந்த அவரது வலது கையை நான் உயர்த்திப் பார்த்தபோது, அது பாதி மரத்துப் போன நிலையில் இருந்தது. வலது கண்ணின் கருவிழி விரிவடைந்து அசையாமல் நிலையாக இருந்தது. அதாவது, நான் பரிசோதிக்கும் போதே அந்த நபர் உயிரிழந்திருந்தார்.

வைத்தியர் உயிரிழந்தவரைப் பரிசோதித்த நேரத்துடன் ஒப்பிடும்போது, அதற்கு எவ்வளவு நேரத்திற்கு முன்னர் மரணம் நிகழ்ந்திருக்கக்கூடும் என இங்கு சாட்சியங்களை வழிநடத்திய பொலிஸ் அதிகாரி வினவினார்.

அதற்குப் பதிலளித்த வைத்தியர், “ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்குள் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் சாட்சியமளித்த கபில சந்திரசேன அவர்களின் வீட்டில் பணிபுரிந்த ஊழியரான மனதுங்க முதியன்சேலாகே சோமதாச என்பவர், நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், கபில சந்திரசேன அவர்கள் பிணை பெற்று மே மாதம் 06 ஆம் திகதி பார்ன்ஸ் பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்த தருணத்திலிருந்து, மே மாதம் 07 ஆம் திகதி மீண்டும் அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்ற தருணம் வரை, அவரைச் சந்திக்க எவரும் வீட்டிற்கு வரவில்லை எனக் கூறினார்.

அதன்பின்னர், கபில சந்திரசேனவின் பார்ன்ஸ் பகுதி வீட்டில் பணிபுரிந்த ஊழியரான சுப்ரஹிம் பிரமிளா எனும் பெண்ணும் சாட்சியமளித்தார்.

மே மாதம் 06 ஆம் திகதி கபில சார் மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்தார். இரவு 8.30 மணியளவில் உணவு அருந்திவிட்டு, நாங்கள் நலமாக இருக்கிறோமா, நாய்களுக்கு உணவு கொடுத்தோமா என்பது போன்ற சில விடயங்களைப் பேசிவிட்டு, உடல் சோர்வாக இருப்பதாகக் கூறி உறங்கச் சென்றார்.

மறுநாள் மாலை 3.30 மணியளவில் சார் காரில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அரவிந்த சாருடைய சாரதி மீண்டும் காரைக் கொண்டு வந்து எமது வீட்டில் நிறுத்திவிட்டு என்னிடம் சாவியைத் தந்தார்.

இரவு 11.30 மணியளவில் கபில சார் எனக்கு அழைப்பு விடுத்தார். முதலில் ‘இரவு அணிவதற்கு ஒரு ஆடையைப் பையொன்றில் போடுங்கள்’ என்று கூறினார்.

பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் அழைத்து, ‘இரண்டு சோடி மூக்குக்கண்ணாடிகள், மருந்துகள் மற்றும் ஒரு நீல நிற பெல்ட் ஆகியவற்றைப் போடுங்கள்’ எனக் கூறினார். ‘சாரத்திற்கு அடியில் நீல நிற பெல்ட் இருக்கிறது’ என்று சொன்னார். அது சார் உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தும் ஒரு பெல்ட் ஆகும். அதனை எடுத்துச் செல்வதற்கு வாகனம் ஒன்றை அனுப்புவதாக சார் கூறினார்.

பின்னர் ஒரு வாகனத்தில் இருவர் வந்தனர். நான் அவர்களிடம் அந்தப் பையைக் கொடுத்தேன். மறுநாள் சார் வராததால் காலை 6.40 மணியளவில் நான் அவருக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் சார் பதிலளிக்கவில்லை. சார் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்ததாலேயே நான் அவருக்கு அழைப்பு விடுத்தேன் எனத் தெரிவித்தார்.

கபில சந்திரசேன நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று எப்போது கூறினார் என இதன்போது நீதவான் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அவர், முந்தைய நாள் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக அழைத்தபோது, எனக்கு நாளை நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது, வெள்ளை ஆடையொன்றை அயர்ன் செய்து வையுங்கள் எனக் கூறியதாகத் தெரிவித்தார்.

இங்கு மேலதிகமாகச் சாட்சியமளித்த அந்த ஊழியர், மே மாதம் 08 ஆம் திகதி காலை 7.25 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வந்த 05 பேரைக் கொண்ட குழுவினர், வீட்டைச் சோதனை செய்வதற்கான ஆவணம் ஒன்றை காண்பித்து வீட்டைச் சோதனை செய்ததாகக் குறிப்பிட்டார்.

அப்போது அவர்கள், சார் வீட்டில் இருக்கிறார் தானே, பொய் சொல்ல வேண்டாம், உங்களையும் கூட்டிச் செல்வோம் எனக் கூறியதாகவும் அந்த ஊழியர் தெரிவித்தார்.

காலை 8.15 மணியளவில் அவர்கள் புறப்பட்டுச் சென்ற பின்னர், கபில சந்திரசேன அவர்கள் உயிரிழந்துவிட்டதை தான் அறிந்துகொண்டதாக அந்த ஊழியர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

இதன்போது கபில சந்திரசேனவின் வீட்டிலிருந்து அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்கு கபில சந்திரசேனவின் ஆடைகள், மருந்துகள் மற்றும் பெல்ட் அடங்கிய பையை எடுத்துச் சென்ற அரவிந்த டி சில்வாவின் இரண்டு சாரதிகளிடமிருந்தும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலதிக சாட்சி விசாரணை மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என