தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும் பின்னடைவைச் சந்தித்தது. கடந்த 2021 தேர்தலில் 66 இடங்களை வென்றிருந்த அந்தக்கட்சி, இந்தத் தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அக்கட்சி இழந்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத வகையில் பல தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வைப்புத்தொகையை (Deposit) இழந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், த.வெ.க-வில் உள்ள மூத்த தலைவர் ஒருவர், அ.தி.மு.க-விலிருந்து சில எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அ.தி.மு.க-வில் சிலர் த.வெ.க-விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்தனர். இதையறிந்த எடப்பாடி பழனிசாமி சுதாரித்துக்கொண்டு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களைப் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்தார்.
விஜய் ஒருபுறம் முதலமைச்சராகப் பொறுப்பேற்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக தி.மு.க. ஆதரவில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அந்த முயற்சியில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இதற்கிடையில், புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நேற்று காலை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவுகள் குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். அப்போது எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாகச் சிலர் குற்றம் சுமத்திப் பேசியதாகத் தெரிகிறது. பின்னர் இக்கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் ஒன்றுகூடினர். அங்கு பிற்பகல் 2:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. அதில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், லீமா ரோஸ், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட சுமார் 37 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, அவருக்கு எதிராகச் சிலர் காரசாரமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் 37 சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பிறகு 1987-லும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-லும் அதிமுக சந்தித்த பிளவு போன்றதொரு சூழல் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது. அதிமுகவின் மொத்தமுள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் (37 பேர்) தவெக-விற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதால், அதிமுக இரண்டாக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சட்ட விதிகளின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. அந்த 37 உறுப்பினர்களே “உண்மையான அதிமுக” எனக் கருதப்படவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்கள் பதவியை இழக்காமல் தவெக ஆட்சியமைக்கப் பலம் சேர்க்க முடியும்.
இந்த 37 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களையும் ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ‘118’ என்ற மேஜிக் எண்ணை (பெரும்பான்மை) எட்டிவிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 37 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தால், சட்டசபையில் விஜய்யின் பலம் அசுர வேகத்தில் உயரும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சென்னையில் இன்று காலை 9 மணிக்குக் கூடும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. “எடப்பாடி பழனிசாமியை நீக்குவதற்கு எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எப்படி முடிவு எடுக்க முடியும்? அது பொதுக்குழு அல்லது கட்சி மட்டத்திலான கூட்டத்தில்தான் எடுக்கப்பட வேண்டிய முடிவு” என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை, இன்னும் ஓரிரு நாளில் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.