சென்னை:
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறிக்கு இடையே, தமிழக அரசியல் களம் இன்று மாலை ஒரு மிக முக்கியமான அதிரடித் திருப்பத்தைச் சந்திக்க உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து 40 நிமிடங்கள் ஆலோசித்தும், ஆட்சி அமைக்க இன்னும் அழைப்பு விடுக்கப்படாத நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்.
முன்னதாக, ஆளுநரைச் சந்தித்த விஜய், 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை (திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்துள்ளதால் தவெக 107 + காங்கிரஸ் 5) சமர்ப்பித்துத் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், “யூகத்தின் அடிப்படையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது; 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே அழைக்க முடியும்” என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். விஜய்யின் விளக்கங்களில் ஆளுநருக்குத் திருப்தி ஏற்படாத நிலையில், எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி 53 இடங்களைக் கைப்பற்றியுள்ள சூழலில், திமுக-வின் வெளி ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நொடிக்கு நொடி எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
#EPS #GovernorMeeting #ADMK #TVK #BreakingNews #May7 #TamilNaduPolitics #RajBhavan #MajorityTest #Vijay #ThalapathyVijay #VijayAsCM #PoliticalCrisis #Stalin #ElectionResults2026 #NewGovernmentTN #TamilNews #AssemblyUpdate #Arlekar #PoliticalDramaTN #VijayMakkalIyakkam_