டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கைகளின் போது, இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படும் இலங்கை குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெறும் பெரும்பாலான குற்றச் செயல்கள் டுபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பதுங்கியிருக்கும் இலங்கை குற்றவாளிகளாலேயே வழிநடத்தப்படுவதாக பாதுகாப்புப் படையினர் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் ஈரானில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி இலங்கைக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைப்பது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது தெரியவந்துள்ளது.
இதற்கமைய, வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களைக் கைது செய்ய அந்த நாட்டு அதிகாரிகள் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
எவ்வாறாயினும், தற்போது ஈரான் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், ஈரானிய குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேணும் நபர்களைக் கண்டறிய அந்த நாடுகள் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதன் விளைவாக, இலங்கையைச் சேர்ந்த பல குற்றவாளிகள் ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் படுவத்தே சாமர, மோதர நிபுன, பரேவி சுதா உள்ளிட்ட பல முக்கிய குற்றவாளிகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியான போதிலும், அவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இது குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் மத்திய கிழக்கு நாடுகளிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கைகள் காரணமாக, தற்போது பல குற்றவாளிகள் மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாகவே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘ராஜூ’ என்பவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் இன்று (17) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ‘கரந்தெனிய சுத்தா’வுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 30 வயதுடைய பெண் ஒருவர் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 99 கிராமுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரை கரந்தெனிய சுத்தாவே கொலை செய்துள்ள நிலையில், அதன்பின்னர் அப்பெண் அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் கரந்தெனிய சுத்தாவுடன் வீடியோ அழைப்பில் (Video Call) பேசும் புகைப்படமும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது தாயாரும் சகோதரரும் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலதின் மேற்பார்வையில், காலி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ. புஷ்பகுமாரவின் வழிகாட்டலில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.