இலங்கைத் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார லாபகரமான முதலீட்டு வாய்ப்பு ஒன்றை பரிந்துரைப்பது போல சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒரு மோசடி என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘Factcrescendo’ எனும் உண்மைச் சரிபார்ப்பு இணையதளம் இது குறித்து விசாரணை நடத்தியது. அதில், பரப்பப்படும் வீடியோ மற்றும் அது தொடர்பான செய்திக் கட்டுரைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட போலியானவை (Online Scam) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடக இணையதளம் ஒன்றின் வடிவமைப்பைப் போன்று போலியாகத் தயாரிக்கப்பட்ட கட்டுரைகளில், குமார் சங்கக்கார மற்றும் பிரபல தொழிலதிபர் ஓட்டாரா குணவர்தன ஆகியோர் இந்த முதலீட்டுத் திட்டங்களுடன் தொடர்புடையவர்கள் எனப் பொய்யாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தச் செய்திகள் நீக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரைப் பயன்படுத்தியும் இத்தகைய போலிப் பதிவுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இலங்கை கணினி அவசரப் பிரிவினர் (SLCERT) இவை திட்டமிட்ட மோசடிகள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்யலங்கார, இத்தகைய பதிவுகள் உண்மையானவை போலத் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்த மோசடியானது பயனர்களைத் தவறான இணைப்புகளை (Malicious links) கிளிக் செய்யத் தூண்டி, அவர்களின் தனிப்பட்ட தரவுகள் அல்லது பேஸ்புக் கணக்கின் விபரங்களைத் திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வரும் இத்தகைய செய்திகளை நம்புவதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான பதிவுகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.