ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் காலநிலை மாற்றம் மற்றும் சக்திவள பாதுகாப்பின்மை ஆகிய இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாக வலியுறுத்தியுள்ளார்.
காலநிலை தொடர்பான லண்டன் காலநிலை நடவடிக்கை வாரம் நிகழ்வில் உரையாற்றிய அவர், புதைபடிவ எரிபொருட்கள் மீது தொடர்ச்சியாக சார்ந்திருப்பது, உலக வெப்பநிலை அதிகரிப்பிற்கும் சக்திவள பாதுகாப்பு அபாயங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளதாக எச்சரித்தார். அதேவேளை, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள பாதுகாப்பு, குறைந்த செலவு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு மாற்றுப் பாதையாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“புதைபடிவ எரிபொருட்கள் மீது சார்ந்திருப்பதன் அடிப்படையில் சக்திவள சுதந்திரத்தை உருவாக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது” என செயலாளர் நாயகம் தெரிவித்தார். உலகின் பெரும்பாலான பகுதிகளில் புதிய மின்சார உற்பத்திக்கான மிகக் குறைந்த செலவிலான மூலமாக மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளம் மாறியுள்ளதுடன், நீண்டகால சக்திவளப் பாதுகாப்பின் அடித்தளமாகவும் அது விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை ஏற்கனவே பாதித்து வருவதாக எச்சரித்த அவர், தூய்மையான சக்திவளத்தை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்துவது பாதுகாப்பான, நிலைத்தன்மை மிக்க மற்றும் எதிர்கால சவால்களைத் தாங்கக்கூடிய உலகை உருவாக்குவதற்கு இன்றியமையாதது என வலியுறுத்தினார். இச்செய்தி இலங்கைக்கும் மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் நாடு தற்போது அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்குகள், வறட்சி நிலைமைகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் மூலம் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை அனுபவித்து வருகிறது.
மேலும்,செயலாளர் நாயகம் மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான உலகளாவிய செயற்பாட்டு அழைப்பை அறிவித்தார். இந்த முயற்சி புதைபடிவ எரிபொருள், விவசாயம் மற்றும் கழிவு முகாமைத்துவத் துறைகளில் இருந்து உருவாகும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக வெப்பமயமாதலின் சுமார் மூன்றில் ஒரு பங்கிற்கு மீத்தேன் காரணமாக இருப்பதால், அதன் வெளியேற்றத்தைக் குறைப்பது காலநிலை மாற்றத்தின் வேகத்தை குறைப்பதற்கான மிக விரைவான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். அதேவேளை, இது பொதுச் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பையும் அவர் வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்னேற்றுவதில் செயற்கை நுண்ணறிவு உதவக்கூடியதாக இருந்தாலும், அதனை இயக்கும் முறைமைகள் கணிசமான அளவில் சக்திவளம், நீர் மற்றும் நில வளங்களை பயன்படுத்துகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, செயலாளர் நாயகம் “செயற்கை நுண்ணறிவு சூழல் வெளிப்படைத்தன்மை முன்முயற்சி” ஒன்றை முன்மொழிந்தார். அதன் கீழ், முக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்களது முறைமைகளின் சூழல் பாதிப்புகளை வெளிப்படையாக வெளியிடுவதோடு, 2030 ஆம் ஆண்டிற்குள் தங்களது தரவு மையங்களை முழுமையாக மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
காலநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை தனது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு ( NDC 3.0) திட்டத்தின் கீழ், 2035 ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 20.09 சதவீதத்தால் குறைப்பதற்கு உறுதியளித்துள்ளது. அதேபோல், 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சார உற்பத்தியின் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள மூலங்களிலிருந்து பெறுதல், வன அடர்த்தியை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்பட்ட மீள்சுழற்சி மற்றும் கழிவு முகாமைத்துவ முறைகள் மூலம் கழிவுத் துறையில் இருந்து உருவாகும் வெளியேற்றங்களைக் குறைத்தல் ஆகிய இலக்குகளையும் நாடு நிர்ணயித்துள்ளது.
இந்த மாற்றம் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையும் வழங்குகிறது. செயலாளர் நாயகரின் உரை குறித்துக் கருத்துத் தெரிவித்த, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. மார்க்-ஆண்ட்ரே பிரான்ஷ், சர்வதேச எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் இடையூறுகளால் நாடுகள் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவை என்பதை அண்மைய உலக நிகழ்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன என்று குறிப்பிட்டார்: “புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதை விரைவுபடுத்துவது என்பது காலநிலை மாற்றத்தின் ஒரு கட்டாயம் மட்டுமல்ல; அது இலங்கையின் எரிசக்திப் பாதுகாப்பு, பொருளாதார மீள்திறன் மற்றும் நீண்டகால நிதி நிலைத்தன்மை ஆகியவற்றில் செய்யப்படும் ஒரு முதலீடும் ஆகும். சரியான முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகளின் மூலம், இந்த மாற்றம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சமூகங்களை வலுப்படுத்தவும், அதே நேரத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்கவும் உதவும்”.