சட்டவிரோதமாக உதிரிப்பாகங்கள் இணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடிக்கு பொலிஸார் மற்றும் முப்படைச் சார்ந்த சில அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடவத்தை, மீகஹவத்த மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்கள், ஜீப் ரக வாகனங்கள், வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சுமார் 40 சட்டவிரோத வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தமது வாகனங்கள் திருடப்பட்டிருந்தால் அல்லது காணாமல் போயிருந்தால், 011-2947780 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு அறியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.