மண்ணெண்ணெய் விலை உயர்வு மற்றும் சட்ட விரோத கடற்றொழிலால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவித்துவிட்டு திடீரென்று எரிபொருளுக்கு விலை அதிகரித்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட அதே வேலைகளையே இந்த அரசாங்கமும் மேற்கொள்கின்றது.தற்போதைய எரிபொருள் விலை ஏற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மண்ணெண்ணெய்க்கு விலை அதிகரிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையிலும் கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு சென்றால் அங்கு சட்டவிரோத மீன்பிடியாளர்கள் மற்றும் இந்திய உள்ளூர் அடிமடி (rollers) மீன் பிடியாளர்களினால் மீன் உற்பத்தியிடங்கள் அழிக்கப்படுகின்றது.
இதனால் கடற்றொழிலாளர்கள் மீன் இன்மை காரணமாக வெறும் கையோடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலட்டை மற்றும் சுருக்கு வலை தொழில் செய்வதற்காக அனுமதி பெற்றுவிட்டு வடமராட்சி பகுதியில் கடலட்டை மற்றும் சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவதாாவும் அவர் தெரிவித்தார்.