2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக, சாத்தியமான தாக்குதல் குறித்து அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டுகளை சிவில் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் பகிர்ந்துள்ளார்.
இலங்கையின் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் பரிமாறப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் செய்திகள், வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது சகாக்கள் இலங்கையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன. கிழக்கு மாகாணத்தில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒத்திகை (Dry run) குறித்தும் இந்தத் தொடர்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்திகளின் உள்ளடக்கத்தின்படி, “2019.04.21 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ எந்த நேரத்திலும்” தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பப்பட்டதுடன், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்படி, இலங்கையின் புலனாய்வுப் பிரிவினருக்கு சாத்தியமான தாக்குதல் குறித்த தகவல் 2019 ஏப்ரல் 4 ஆம் தேதியிலேயே கிடைத்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், புலனாய்வு எச்சரிக்கைகளின் காலவரிசை பின்வருமாறு:
-
2019 ஏப்ரல் 4: சாத்தியமான தாக்குதல் குறித்து ஒரு மூலத்திலிருந்து வாட்ஸ்அப் மூலம் ஆரம்பகட்ட புலனாய்வுத் தகவல் கிடைத்தது. இதேபோன்ற எழுத்துப்பூர்வமான தகவல் ஏப்ரல் 5 ஆம் தேதி கிடைத்தது.
-
2019 ஏப்ரல் 7: அப்போதைய தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மெண்டிஸிடம் முதல் தகவல் வெளிப்படுத்தப்பட்டது.
-
2019 ஏப்ரல் 8: பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர் இது குறித்து பொலிஸாருக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.
-
2019 ஏப்ரல் 9: உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. எனினும், அங்கு இந்த அச்சுறுத்தல் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் வௌியாகியுள்ள இந்த ஸ்கிரீன்ஷாட்டுகளின் நம்பகத்தன்மை குறித்து அதிகாரிகளினால் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.