புகழ்பெற்ற ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் மூத்த நிருபரும், வெள்ளை மாளிகை செய்தியாளருமான கேத்தரின் லூசியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் இழிவான வார்த்தைகளால் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த 14-ம் திகதி ஜனாதிபதியின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகள் குறித்து கேத்தரின் லூசி கேள்வி எழுப்பினார்.
ஏற்கெனவே பதிலளித்திருந்த ட்ரம்ப், அவர் மீண்டும் ஒரு துணைக் கேள்வி கேட்க முயன்றபோது, அவரைக் கையஉயர்த்தி , “வாயை மூடு… வாயை மூடு பன்றிக்குட்டி (Shut up, shut up, piglet)” என்று கூறிவிட்டு அடுத்த நிருபருக்கு வாய்ப்பளித்தார்.
இந்தக் காணொலி வெளியானதையடுத்து, ஊடகத்துறையினர் பலரும் ட்ரம்பின் பேச்சு ‘அருவருப்பானது’ மற்றும் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எனினும், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், லூசி சக நிருபர்களிடம் ‘முறையற்ற வகையில் நடந்துகொண்டார்’ என்று கூறி ட்ரம்பிற்கு ஆதரவாகப் பேசியது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.