முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்ற அழைப்பாணை கிடைக்கும் பட்சத்தில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (04) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
மேல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இருவருக்கும் எதிராக நிலுவையிலிருந்த வழக்கு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர நீதவான் தீர்மானித்துள்ளார்.
வணிக மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காகத் தனது பிரதிவாதிக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துமாறு யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். எனினும், வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் இது குறித்து எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதவான் அறிவித்துள்ளார்.
தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயத்தைச் சமூக ஊடகங்கள் மூலமாகவே அறிந்துகொண்டதாக வசந்த கரன்னாகொட சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தேவையான தகுதிகள் பூர்த்தியாகாத நிலையிலும், யோஷித ராஜபக்ஷ இலங்கை கடற்படையில் ‘நிறைவேற்று அதிகாரி நிலை கெடட்’ அதிகாரியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும், நடைமுறைகளை மீறி அரச நிதியைப் பயன்படுத்தி அவர் பிரித்தானியாவின் ரோயல் கடற்படை கல்லூரியில் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.