யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான தொடருந்து சேவைகளை மீள அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைப்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (20.06.2026) காலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்துக்கு பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாலும், பாதுகாப்பான மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் பயணமாக தொடருந்து போக்குவரத்து அமைவதாலும், கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான தொடருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பயணிகளின் வசதிக்கேற்ப தற்போதைய நேர அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே சேவைகளை முழுமையாக மீள ஆரம்பிப்பதில் பல தடைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், புதிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்காலிகமாகச் சேவைகளை அதிகரிப்பது மற்றும் பகல் நேர தொடருந்து சேவைகளை ஒழுங்கமைப்பது தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன், ‘யாழ். ராணி’ தொடருந்து சேவையில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டு, அதனை வவுனியா வரை நீடிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் பற்றைக்காடுகளாகக் காணப்படுவதுடன், சில பகுதிகளில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
பயன்படுத்தப்படாத அந்தக் காணிகளைத் துப்புரவு செய்து, மக்களுக்கே வழங்கும் சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகரிலுள்ள அன்னசத்திர வீதியை தொடருந்து திணைக்களம் மூடியுள்ளமைக்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியை ஆளுநரும், அமைச்சர் இ.சந்திரசேகரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த தொடருந்து அதிகாரிகள், தொடருந்து பாதைகள் தொடர்பான ‘மாஸ்டர் பிளான்’ அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும் எனவும், அதன் பின்னரே காணிகள் மற்றும் வீதிகள் விடுவிப்புத் தொடர்பில் இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண தொடருந்து பாதைகள் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், குறுக்கறுக்கும் வீதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிரதான வீதிகளுடன் இணைக்கும் சமாந்தர வீதிகளை அமைப்பதே விபத்துகளைத் தவிர்க்கும் சிறந்த வழிமுறை என தொடருந்து பணிப்பாளர் சுட்டிக்காட்டியள்ளார்.
‘டித்வா’ பேரிடரால் சேதமடைந்து இடைநிறுத்தப்பட்டுள்ள தொடருந்து சேவையை, மடுத் திருவிழாவுக்கு முன்னதாக மீள ஆரம்பிப்பதற்குச் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பொது முகாமையாளர் உறுதியளித்துள்ளார்.
மூடப்பட்ட ரயில் கடவைகளால் மக்கள் பல கிலோமீற்றர்கள் சுற்றிச் செல்லும் நிலை காணப்படுவதால், இது குறித்து கள ஆய்வு செய்து சில கடவைகளை விடுவிக்கவும், ஏனையவற்றிற்கு மாற்று வீதிகளை அமைக்கவும் தொடருந்து திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தின் ஒரேயொரு தொடருந்து நிலையமான மாங்குளத்தில் அனைத்து தொடருந்துகளும் நிற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன், அங்கு பன்முகப் போக்குவரத்து மையமொன்றை அமைப்பதன் ஊடாக தற்போதைய காணி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களால் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், இலங்கை தொடருந்து திணைக்களப் பணிப்பாளர், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்கள், யாழ்ப்பாணம் உதவி மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கைச் செயலணியின் இயக்குநர், வவுனியா மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.