ஜூன் 5, 2026 அன்று மார்க்கம் பகுதியில் ஏற்பட்ட வீடு தீ விபத்தைத் தொடர்ந்து பல வீடுகள் வெளியேற்றப்பட்டன மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
மார்க்கம் (Markham) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, அருகிலுள்ள மற்ற வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று முதியவர்கள், சிகிச்சை பலனின்றி சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளனர்.
ஜூன் 5 அன்று காலை 7 மணிக்குச் சற்று முன்பாக, கார்ல்டன் (Carleton) மற்றும் கென்னடி (Kennedy) சாலைகளுக்கு அருகில் உள்ள பகுதிக்கு அவசரக்கால மீட்புக் குழுவினர் அழைக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை சிபி24 (CP24) ஊடகத்திற்கு யார்க் பிராந்திய காவல்துறை வழங்கிய புதிய தகவலின்படி, தீ விபத்திற்குப் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூன்று குடியிருப்பாளர்களும் தற்போது உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 70 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மற்றும் 80 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை ‘சாப்பர் 24’ (Chopper 24) வான்வழிப் படங்கள் மூலம், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோது, அத்தீ அருகிலுள்ள குறைந்தது ஒரு வீட்டிற்காவது பரவியதைக் காண முடிந்தது. அப்பகுதியில் உள்ள பல குடியிருப்புகள் உடனடியாக வெளியேற்றப்பட்டன.
“எங்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, முதல் தளத்தில் இருந்து பலத்த புகையும் நெருப்பும் வந்துகொண்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குடும்ப உறுப்பினர்களால் மீட்கப்பட்டிருந்தார் அல்லது அவராகவே வெளியேறியிருந்தார்” என்று மார்க்கம் தீயணைப்புத் துறைத் தலைவர் கிறிஸ் நீரிங் (Chris Nearing) இதற்கு முன்பு CP24-இடம் தெரிவித்திருந்தார்.
மேலும் இரண்டு குடியிருப்பாளர்கள் தீயணைப்பு வீரர்களால் வீட்டிலிருந்து மீட்கப்பட்டு, மருத்துவ உதவியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவருக்குக் கடுமையான காயங்களும், மூன்றாவது நபருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாகக் காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.
தற்போதைய நிலவரப்படி இந்தத் தீ விபத்தில் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பின்னணியும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், வரும் நாட்களில் இது குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.