கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மதியம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவின் பெரன்னாவ, தென்னவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன, பெரன்னாவ மகா வித்தியாலயத்தின் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் நெதுகி சஹன்யா (வயது 7) என்ற சிறுமியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று குறித்த மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தென்னவத்த – பத்தனேகல வீதியை சுத்தம் செய்யும் போது, அதன் அருகில் நாயொன்று இருப்பதை கண்டு குறித்த இடத்தை சோதனையிட்ட போது கிதுல் மரத்தின் கிளைகளுக்கு அடியில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கரவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய், தந்தை, தம்பி மற்றும் பாட்டி ஆகியோர் மண்சரிவில் சிக்கி புதைக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுமியின் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சிறுமி மற்றும் அவரது தாயார் தவிர மற்றவர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.