அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு 20மூ முதல் 30மூ வரை பாதிப்பு ஏற்படும் என சுற்றுலா துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளில் சுமார் 40 சதவீதமானோர் டுபாய், கட்டார் அல்லது அபுதாபி ஆகிய விமான நிலையங்கள் ஊடாகவே வருகின்றனர். தற்போது நிலவும் யுத்த சூழல் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (03) கருத்துத் தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர், மோதல்கள் ஆரம்பமான கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் நேற்று வரை 205 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதில் 107 விமானங்கள் இலங்கைக்கு வரவிருந்தவை என்பதுடன், 98 விமானங்கள் இலங்கையிலிருந்து புறப்படவிருந்தவை ஆகும்.
ஐரோப்பாவிலிருந்து வரும் விமானங்கள் மத்திய கிழக்கு வான்பரப்பைத் தவிர்த்து மாற்று வழிகளில் வருவதாகவும், இதனால் ஏற்படும் எரிபொருள் செலவு அதிகரிப்பு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கான பயணப்பொதி (Luggage) வரம்புகளை விதிக்க விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் கலாநிதி ரோஹந்த அத்துகோரள, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியமானது இலங்கையின் சுற்றுலா வருகையில் பாரிய பங்களிப்பு செய்கிறது. இந்த மோதல்கள் காரணமாக முதலில் அந்த வருகைகளை நாம் இழக்க நேரிடும். ஆனால், வளைகுடா பிராந்தியமே இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் தங்கிச் செல்லும் (Transit) இடமாகும். இத்தாலி, ஸ்பெயின் போன்ற நேரடி விமான வசதிகள் இல்லாத நாடுகளின் பயணிகளும் இதன் ஊடாகவே வருகின்றனர். இந்த விமான நிலையங்கள் மூடப்பட்டால், ஐரோப்பிய பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும்.
மேலும், எரிபொருள் விலை 100 – 120 டொலர்களாக அதிகரித்தால் அது உலகப் பொருளாதார நெருக்கடியாக மாறி, ஐரோப்பிய பயணிகளின் முடிவுகளையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், இந்த பாதிப்பை ஈடுகட்ட இந்திய, அவுஸ்திரேலிய, ஜப்பான் மற்றும் கொரிய சந்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஐரோப்பாவிற்கான நேரடி விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும். மோதல்களில் சிக்காத துருக்கியின் ‘டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி விமான சேவைகளை விரிவாக்க வேண்டும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் (SLAITO) தலைவர் நலின் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் எனும் இலக்கை அடையக்கூடிய சாத்தியக்கூறுறுகள் இல்லை. இதன் காரணமாக வாரத்திற்கு 10 முதல் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பக்கூடும் என்றும் சுற்றுலாதுறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.