பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நோக்கிய பயணம் இன்னமும் முடிவடையவில்லை அது தலைமுறை தலைமுறையாக முன்னெடுக்கப்படவேண்டிய பயணம் என கனடாவின் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கனடா ஒட்டாவா பாராளுமன்ற வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05.05.2026) தமிழ் இனப் படுகொலையின் 17வது ஆண்டு நினைவுநாள் கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகம் தற்போது இக்கட்டான கால கட்டத்தை கடந்துகொண்டிருக்கின்றது இலங்கை அமைந்துள்ள புவிசார் சூழலும் அங்கு தமிழ் மக்கள் வாழும் நிலையும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நாங்கள் நகர்வதை கடினமாக்கியுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
கடந்த இரண்டு வாரங்களாகப் பலர் வந்து சென்றிருந்தாலும், ஒட்டாவாவில் இந்த இனப்படுகொலை நினைவு நாளைக் கடைப்பிடிக்க இன்றுதான் எங்களுக்குச் சிறந்த நாளாக அமைந்தது. மார்க்கம் (Markham) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிம் ஹாட்சன் (Tim Hodgson) அவர்கள் இங்கே வந்திருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இங்கே வருகை தந்துள்ள அனைத்து அமைப்புகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 12 அமைப்புகள் இங்கே இருப்பதை நான் அறிவேன். எமது மக்களுக்கு என்ன நடந்தது என்பதை அங்கீகரிக்கும் இந்த மிக முக்கியமான நிகழ்வில் பங்கெடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் மாதத்தில் தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்த முதல் மற்றும் ஒரே நாடாளுமன்றமாக கனடா நாடாளுமன்றம் திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, எமது நாட்டின் தடைகள் விதிக்கும் சட்டங்களின் கீழ், இரண்டு முன்னாள் அதிபர்கள் உட்பட இலங்கை அரசைச் சேர்ந்த பல தனிநபர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கூறல் தொடர்பான முக்கிய குழுவின் (Core Group) அங்கத்தினராக கனடா தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.
உங்களுக்குத் தெரிந்தபடி, உலகம் தற்போது ஒரு இக்கட்டான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. இலங்கை அமைந்திருக்கும் புவிசார் அரசியல் சூழலும், அங்கு தமிழ் மக்கள் இருக்கும் நிலையும் நாம் நகர்வதை மிகவும் சிக்கலாக்குகின்றன. ஆனால் எனக்கு எது முக்கியம் என்றால், தமிழ் மக்களின் உரிமைகள், தமிழ் மொழி உரிமைகள், சுயநிர்ணய உரிமை மற்றும் எமது நிலம் மற்றும் கலாசார உரிமைகளுக்காகப் பல தசாப்தங்களாகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த பலருடைய உறுதிப்பாடுதான்.
1983 முதல் தொடங்கிய அந்தப் பயணம், 2009-க்குப் பிறகு பொறுப்புக்கூறல், அமைதி மற்றும் நீதியை நோக்கிய பாதையில் தொடர்கிறது. இந்த அறையில் இருக்கும் பலர் அந்தப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்தப் பணி இன்னும் முடிவடையவில்லை என்பது எனக்குத் தெரியும்; இது தலைமுறைகளாகத் தொடர வேண்டிய பணி. நாம் தொடர்ந்து ஒற்றுமையுடனும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும். கனடியர்களாகிய நாம், நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்திருந்தாலும், எமது நாடாளுமன்றம் உலகை எமது கண்ணோட்டத்தில் பிரதிபலிக்கிறது
என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி நிகழ்வில் கனடாவின் பல்வேறு பட்ட துறைகளிலும் தங்கள் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு தமிழ் இனப் படுகொலை குறித்த தமது பதிவுகளையும் அடுத்து நாம் என்ன விடயத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்தும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


