கனடிய மத்திய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய ‘சட்டபூர்வ அணுக்கச் சட்டமூலம்’ (Lawful Access Bill), தங்களது பயனர் தரவுப் பாதுகாப்புத் தரநிலைகளை (Privacy protections) பலவீனப்படுத்த நிர்பந்திக்குமாயின், தாம் கனடாவிலிருந்து வெளியேறக்கூடும் என நோர்ட் வி.பி.என் (NordVPN) நிறுவனம் எச்சரித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பான சட்டமூலத்தை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள அந்த வி.பி.என் சேவை நிறுவனம், அதன் விதிமுறைகளுக்கு இணங்குவது பயனர்களின் தரவு இரகசியத்தன்மை அல்லது மறையாக்கத் தரநிலைகளில் (Encryption standards) சமரசங்களை ஏற்படுத்த வழிவகுக்குமாயின், கனடியச் சந்தையிலிருந்து விலகுவது குறித்துப் பரிசீலிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களைப் பாதுகாக்கும் ‘சிக்னல்’ (Signal) குறுஞ்செய்திச் செயலியும், இதே சட்டமூலக் காரணங்களுக்காகக் கனடாவிலிருந்து வெளியேறக்கூடும் என எச்சரித்த சில தினங்களிலேயே நோர்ட் வி.பி.என் நிறுவனமும் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இதேவேளை, ஆப்பிள் (Apple) மற்றும் மெட்டா (Meta) உள்ளிட்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் இச்சட்டமூலம் தொடர்பில் தமது கடுமையான கவலைகளை வெளியிட்டுள்ளன. இப்புதிய சட்டவிதிகள், மறையாக்கப்பட்ட தகவல் தொடர்புகளையும் (Encrypted communications) பயனர்களின் டிஜிட்டல் பாதுகாப்பையும் முற்றாகப் பாதிக்கும் என அவை வாதிடுகின்றன.
இதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டமூலமானது, தனிநபர் தரவுப் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களின் தனியார் தகவல் தொடர்புகளுக்குள் அரசாங்கம் ஊடுருவுவதற்கான அதிகாரங்களை விரிவுபடுத்தும் என மனித உரிமைகள் அமைப்புகளும் சட்ட வல்லுநர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இருப்பினும், இச்சட்டமூலமானது ‘கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்திற்கு’ (Canadian Charter of Rights and Freedoms) முரணில்லாத வகையில் அமையும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம், நவீன காலக் குற்றங்களை விசாரிப்பதற்கு ஏதுவாக, பாதுகாப்புத் தரப்பினருக்குத் தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான சட்ட ரீதியான கருவிகளை வழங்குவதே இதன் நோக்கமெனக் குறிப்பிட்டுள்ளது