சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாகப் பல்வேறு அரசியல் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு கார் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தற்போது பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு கார் வேண்டாம் என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ தெரிவித்ததாவது:
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் எங்கே?:
“விவசாயிகளுக்கு முழுமையான இலவச மின்சாரம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மின்சாரத் துறை அறிவிப்பில் அது இடம்பெறவில்லை. விவசாயிகள் எதற்காக இலவச மின்சாரத்தைக் கேட்கிறார்கள்? எங்குமே தற்போது போதிய தண்ணீர் இல்லாததால், அவர்கள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். மோட்டார் பம்ப் மூலமாகத் தண்ணீர் இறைத்து விவசாயம் செய்ய வேண்டிய சூழல் இருப்பதால் மட்டுமே அவர்கள் இலவச மின்சாரத்தை எதிர்பார்க்கின்றனர்.
வெறும் 50,000 பேருக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றால், மீதமுள்ள விவசாயிகளின் நிலை என்னவாகும்? ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து மின்கட்டணத்தை உயர்த்துகிறார்கள். இதன் மூலம் மின்சாரத் துறைக்கு நிச்சயமாகக் கூடுதல் வருமானம் வருகிறது. எனவே, அந்த வருவாயைக் கொண்டு விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின்சாரம் வழங்க அரசு முன்வர வேண்டும்.
கார் வேண்டாம் – நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை:
எங்களிடம் ஏற்கனவே சொந்தப் பயன்பாட்டிற்குக் கார்கள் உள்ளன. இதன் காரணமாக பா.ம.க எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அரசு கார் மற்றும் மாதாந்திர வாகனப் பராமரிப்புத் தொகைக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்து, எங்கள் தொகுதிக்குத் தேவையான இடங்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்களைக் கட்டிக் கொடுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
#SowmiyaAnbumani #PMK #MLACarScheme #FreeElectricity #FarmersTN #PaddyProcurementCenter #TNAssembly #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates