சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது.
“பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு, அந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் ”
என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டியில் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையை வெளிப்படுத்த வேண்டும். நீதியான விசாரணைகளுக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று 7 நாட்கள் முடிவடைந்த பிறகும் நீதவான் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. நாட்டில் ஏதேனும் சிறு அசம்பாவிதம் இடம்பெற்றால் அது குறித்து 24 மணித்தியாலத்துக்குள் நீதவான் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் எமது அரசாங்கத்தில் விசாரணைகளை சிறந்த முறையில் மேற்கொண்டு 80 குற்றவாளிகளை அடையாளப்படுத்தி 41 வழக்குகளை தாக்கல் செய்தோம்.
இவ்வாறான பின்னணியில் தான் அப்போதைய சட்டமா அதிபர் சேவையில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு ஒருநாளைக்கு முன்னர் உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போன்று ‘ குண்டுத்தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி உள்ளார்’ என்று குறிப்பிட்டார்.இதன் பின்னர் பேராயர் கர்தினால் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த விடயம் குறித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் வினவிய போது ‘சட்டமா அதிபர் தனது சேவை காலத்தை மேலும் ஒருவருடத்துக்கு நீட்டிக்குமாறு குறிப்பிட்டார்.அதற்கு நான் இணக்கம் தெரிவிக்கவில்லை. அதன் பின்னரே இவ்வாறு குறிப்பிடுகிறார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.
குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பிடிப்பதாகவும், உண்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் பிரதான சூத்திரதாரியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் இன்றுவரை உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டமூலத்தை நாங்கள் சமர்ப்பித்தோம்.ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தை நாடினார்கள்.
யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு, அந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது.
75 ஆண்டுகாலத்தை சாபம் என்று விமர்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த ஒன்றரை வருட கால ஆட்சியில் என்ன செய்தார்கள்.கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டுக்கு ஏதாவதொன்றை செய்துள்ளார்கள். கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்ன செய்வார் என்று நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.