zத்தத்தின் இறுதிக்காலம் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களை தேசிய வீரர்களாக மாற்றுவதற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டது. இன்றும் இந்த யுத்தத்தினால் படுகொலை செய்யப்பட்ட வடக்கின் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளரும், முற்போக்கு சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இந்திரானந்த டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்துவிட்டதா என்ற தலைப்பில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கருத்தரங்கு நேற்று கொழும்பில் செடெக் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்து வந்த ஒவ்வொரு மே 18 ஆம் திகதியையும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வெவ்வேறு விதமாகவே நினைவுகூருகின்றனர். சிங்கள மக்கள் இந்நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வேளையில், எமது சகோதர தமிழ் மக்கள் பெரும் சோகத்துடன் நினைவுகூரும் ஒரு நாளாகவே இந்நாள் மாறியுள்ளது.
முப்பது வருட கால யுத்தத்தின் இறுதிப் பகுதியை அப்போதைய ஆட்சியாளர்கள் ஒரு மனிதாபிமான யுத்தம் என்றே எமக்கு அறிமுகப்படுத்தினர். ஆனால், அந்த யுத்தத்தின் பின்னர் வெள்ளைக்கொடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாக, இந்த யுத்தத்தின் கொடூரம் குறித்து உலகம் முழுவதும் பெரும் பேச்சுவார்த்தை உருவானது.
இந்த யுத்தத்தின் இறுதிக்காலம் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களை தேசிய வீரர்களாக மாற்றுவதற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டது. இன்றும் இந்த யுத்தத்தினால் படுகொலை செய்யப்பட்ட வடக்கின் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை.
யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த வடக்கின் பெருமளவிலான இளைஞர், யுவதிகள் இன்றளவும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த யுத்தத்தினால் வட பகுதி மக்களுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில், எம்மால் ஒரு யுத்த வெற்றியை கொண்டாட முடியாது. ஆனால், கடந்த காலம் முழுவதும் நாட்டின் ஆட்சியாளர்கள் மே 18 யுத்த நினைவேந்தலை வடக்கிற்கு எதிராக தெற்கு மக்களின் மனங்களில் இனவாதத்தை தூண்டும் நோக்கத்திற்காகவே பயன்படுத்தினர் என்பதை நாம் கண்டோம்.
வரலாறு முழுவதும் இந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு யுத்தமே காரணம் என்றே ஆட்சியாளர்கள் காண்பித்தனர். ஆனால், யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் கடந்து செல்லும் போதே நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. எனவே, அனைத்து நெருக்கடிகளுக்கும் யுத்தமே காரணம் என்று கூறிய ஆட்சியாளர்களின் கூற்றுகள் இன்று பொய்யாகிப் போயுள்ளன.
அடுத்த விடயம் என்னவென்றால், தமிழ் மக்களின் ஆயுதமேந்திய எழுச்சி என்பது தானாக உருவானதொன்றல்ல. யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமை, 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட பாரிய அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு வடக்கு மக்கள் ஆளாக்கப்பட்ட ஒரு வரலாறே எமக்கு இருந்தது.
அந்த ஒடுக்குமுறையுடன்தான் முப்பது வருடங்களாக எமது நாட்டை பாரியளவில் காயப்படுத்திய யுத்தம் ஒன்று ஆரம்பித்தது. இப்போது அந்த யுத்தம் முடிவடைந்து இரண்டு தசாப்தங்கள் நெருங்கவுள்ளன. ஆனாலும், அந்த யுத்தம் ஏற்படுவதற்கு காரணமான சம்பவங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வட பகுதி மக்களிடமிருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் இராணுவ முகாம்களே உள்ளன. இன்றளவும் அந்த நிலங்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. முழு வடக்கும் இன்றளவும் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போன்றே காணப்படுகின்றது. எங்கும் இராணுவ சோதனைச் சாவடிகள் காணப்படுகின்றன.
யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெருமளவிலான இளைஞர்கள் இன்றளவும் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களுக்கு இன்றளவும் நீதி கிடைக்கவில்லை. வடக்கில் வாழும் ஒரு கலைஞர் இன்றளவும் தனக்கு தோன்றும் விடயங்களை ஒரு கவிதையிலாவது சுதந்திரமாக எழுதுவதற்கான சுதந்திரம் இல்லை. கடந்த நாட்களில் தீபச்செல்வனின் சம்பவத்தின் மூலம் எமக்கு புலப்பட்டதும் அதுவேயாகும்.
இந்த தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண கடந்த காலத்தில் பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சாட்சியமளித்தனர். ஆனால், அவற்றில் ஒன்றேனும் இன்றளவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் மக்கள் ஒரு மாற்றாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிப் பீடத்தில் ஏற்றினர். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாகவே வட பகுதி மக்கள் தெற்கின் அரசியல் கட்சி ஒன்றை வெற்றிபெறச் செய்வதற்கு பங்களிப்பு வழங்கினர். தம்மை ஒடுக்கும் தேசிய பிரச்சினைக்கு இந்த அரசாங்கத்திலாவது நியாயமான தீர்வு கிடைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அநுர திசாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசாங்கமும் தங்களது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வட பகுதி மக்களின் பிரச்சினையை பயன்படுத்துவதையே நாம் காண்கின்றோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு தொடர்ச்சியாக போராடிய திசைகாட்டி அரசாங்கம், இன்று அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அதைவிடவும் ஆபத்தான அடக்குமுறை சட்டமொன்றை கொண்டுவருவதற்கு தயாராகின்றது.
கவிஞர் தீபச்செல்வனின் இலக்கியப் படைப்புகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி சுங்கத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. அவை குறித்து பேசும்போது, இவ்வாறான விடயங்களை பேச வேண்டாம், காயங்கள் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகின்றது. நாம் கேட்பது, மேலும் புதிதாக காயப்படுவதற்கு என்ன காயம் மீதமுள்ளது? அரசியல் மேடைகளில் இவர்கள் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுகின்றனர். ஆனால், 15 வருடங்களாக மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. அன்று மஹிந்த ராஜபக்ஷ மாகாண சபை தேர்தல் அலையை கொண்டு சென்றது சட்டி சூடாக இருக்கும்போது ரொட்டியை சுட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும். ஆனால், இப்போது சட்டி சூடாக இல்லை, சட்டி முற்றிலும் குழம்பிப் போயுள்ளது.
இப்போது யுத்தம் பௌதிக ரீதியாக முடிவடைந்து நீண்ட காலம் கடந்துவிட்டது. இன்னமும் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் பேணி வருகின்ற இனவாத காயங்கள் இப்பொழுதாவது முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டின் சிங்கள மக்களுக்கு போன்றே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களுக்கும் அரசியல் உரிமைகள் சமமாக கிடைக்க வேண்டும் என நாம் கருதுகின்றோம். அந்த அதிகாரத்தை அவர்கள் நடைமுறை ரீதியாக பரீட்சித்துப் பார்ப்பதற்கு சுயநிர்ணய பகுதிகளைக் கொண்ட அதிகாரப் பகிர்வு கிடைத்தால் மாத்திரமே சாத்தியமாகும். அடுத்ததாக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தேசிய இனப் பிரச்சினைகள் மற்றும் மதப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய சட்டமூலங்களை மறுபரிசீலனை செய்யக்கூடிய இருமண்டல பாராளுமன்ற முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இந்த இருமண்டல சபைக்குள் இந்நாட்டின் அனைத்து மக்கள் பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இப்போது 200 வருடங்களாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் மலையக தமிழ் மக்களை இன்னும் இந்நாட்டில் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்வதில்லை.
தொண்டமான்கள் காலம் தொட்டு தோட்டப்பகுதியின் அரசியல் தலைவர்கள் செய்தது அந்த மக்களின் பிரச்சினையை தங்களது அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தியது மாத்திரமேயாகும். அன்றிலிருந்து தோட்ட நிறுவனங்கள் தங்களது லாப வீதத்தை அதிகரித்துக் கொள்ள இம்மக்களின் இரத்தத்தையும் வியர்வையையும் சுரண்டித் தின்றன.
எனவே, இப்பொழுதாவது இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மலையக தமிழ் மக்களை இந்நாட்டின் ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தால் மாத்திரமே அந்த தீர்வு கிட்டும். அத்துடன் காணி மற்றும் வீடமைப்பு உரிமை போன்றே கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உரிமைகளும் அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டும். இவைகளையே இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுகளாக முன்வைப்பதற்கு நாம் பிரேரிக்கின்றோம்.
முன்பு தொலைக்காட்சியில் அசோக ஹந்தகமவின் சிந்தடிக் சிஹின (செயற்கை கனவுகள்) என்ற நாடகம் ஒளிபரப்பானது. அந்த நாடகத்தின் ஒரு இடத்தில், நாம் ஒரு வட்டத்தில் பயணிக்கும்போது வரலாற்றில் அநுபவித்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகின்றது. நாம் எமது நாட்டு அரசியலுக்குள் இந்த கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் அநுபவித்திருக்கின்றோம்.
வட பகுதி மக்களின் கண்ணீர், தோட்டப்பகுதி தொழிலாளர்களின் வியர்வை மற்றும் இரத்தத்தின் வாசனை, முஸ்லிம் மக்களின் ஒடுக்குமுறை என்பனவற்றை நாம் மீண்டும் மீண்டும் சந்திக்க நேரிடும். எனவே, இந்த சுழற்சியை நாம் இப்பொழுதாவது உடைத்தெறிய வேண்டும்.
மீண்டும் மீண்டும் வரலாறு எமக்கு முகம் கொடுக்கும் இந்த காட்டுமிராண்டித்தனமான முறையை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு தற்போதைய தலைமுறையினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை எம்மால் தனித்து செய்ய முடியாது. இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்கள் ஒன்றிணைந்த ஒரு பரந்த மக்கள் சக்தியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அத்தகைய மக்கள் சக்தியின் மூலமே இந்நாட்டின் ஆட்சியாளர்கள் முன்னெடுக்கும் மக்கள் துரோக வேலைத்திட்டங்களை எம்மால் பின்னோக்கி நகர்த்த முடியும் என்றார்.