நோர்த் யோர்க் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10, 2026) நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து டொராண்டோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு ‘ஜேன் வீதி’ (Jane Street) மற்றும் ‘ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு’ (Sheppard Avenue East) பகுதிக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் வந்தபோது, துப்பாக்கிக் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இருவரைக் கண்டறிந்து, கடுமையான காயங்களுக்குள்ளான அவர்களை அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அங்கு காணப்பட்ட மூன்றாவது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கு வழிவகுத்த காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பதுடன், இந்த நேரத்தில் சந்தேகநபர் குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், விபரங்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் 416-808-3100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்