அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகள், ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் முறையாகப் பாதுகாக்கப்படாமல் மழைநீரில் நனைந்து வீணாவது தொடர்கதையாகி உள்ளது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நெல் மணிகள் எப்படி வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணானதோ, அதேபோல் மாற்றம் கொண்டு வருவோம் என்று ஆட்சிக்கு வந்த தற்போதைய தவெக ஆட்சியிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் நெல் மணிகள் வீணாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெல் கொள்முதல் கிடங்குகளுக்குப் போதிய குடோன்கள் இல்லை என்பதும், நெல் மூட்டைகளைப் பாதுகாக்கப் போதுமான தார்ப்பாய்கள் கூட இல்லை என்பதும் அரசின் அவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீபெரும்புதூர், ராமானுஜபுரம், விருதுநகர் மற்றும் ராணிப்பேட்டை போன்ற இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பாதுகாப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வீணாகியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல் பல மாதங்களாகத் தேக்கி வைத்திருப்பதும், போதிய தார்ப்பாய்கள் வழங்காததுமே இந்தத் துயரத்திற்கு முக்கிய காரணம் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். விளைவித்த நெல் மழையில் வீணானதால், அவற்றின் தரம் குறைந்து விற்பனை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கொள்முதல் நிலைய அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்படுவதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டாலும், வெறும் பார்வையால் மட்டும் விவசாயிகளின் குறைகள் தீர்ந்துவிடாது. எனவே, அனைத்து திறந்தவெளி கொள்முதல் நிலையங்களிலும் நிரந்தர குடோன்கள் அமைக்க உடனடி நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். குடோன்கள் கட்டி முடிக்கப்படும் வரை போதிய தார்ப்பாய்களை கொள்முதல் செய்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அரசின் நிதிநிலையைக் காரணம் காட்டி குடோன் அமைக்கும் பணிகளைத் தள்ளிப்போடக் கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி இந்த அரசை வலியுறுத்தியுள்ளார்.
#EPS #PaddyDamage #EdappadiPalaniswami #TvkGovernment #FarmersWelfare #TamilNaduAgriculture #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #Agriculture #TamilNaduPolitics #RainDamage #StorageFacilities #TamilNaduNews #PoliticalAttack #PositiveGovernance #Economy2026 #VijayGovernment #Debate #TNPolitics #PoliticalNews #FoodSecurity #AgriculturalLoss #PublicRepresentation #GovernmentAccountability #CropLoss