அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியோரை இலக்கு வைத்து அப்பட்டமான பிரசாரங்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தார்.
நாமல் இங்கிலாந்தில் இவ்வளவு பெரிய சொத்தை வாங்கியிருந்தால் அங்குள்ள புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சும்மா இருந்திருப்பார்களா? அதுவும் சட்டவிரோதப் பணமாக இருந்தால் அவர்கள் அதனை முடக்கக் கோரி அந்நாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்க மாட்டார்களா? ஏன இதன்போது பசன் கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும் குறிவைத்து முன்னெடுக்கப்படும் அவதூறுகளை நாம் அவதானித்து வருகிறோம்.
இதன் ஒரு கட்டமாகவே நாமல் ராஜபக்ஷ இங்கிலாந்தில் 36 பில்லியன் ரூபா பெறுமதியில் வீடு வாங்கியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது.
2016ஆம் ஆண்டு என்பது ஜே.வி.பியின் பெரிய சகோதரர்கள் பின்வாசல் வழியாகச் சென்று ராஜபக்ஷவினரின் திருட்டுகளைப் பிடிக்கிறோம் என்று சதி செய்த காலம். அத்தகைய கடும் கண்காணிப்பு இருந்த காலத்தில் இவ்வளவு பெரிய தொகையில் சொத்து வாங்குவது எப்படிச் சாத்தியமாகும்?
ஒரு பொய்யைச் சொன்னாலும் அதில் ஒரு அடிப்படை வேண்டாமா? 34 முதல் 36 பில்லியன் ரூபா என்பது சாதாரணத் தொகையல்ல. நாமல் ராஜபக்ஷ போன்ற அரசியலில் நன்கு அறியப்பட்ட ஒரு நபர் உலகின் எந்த நாட்டிலாவது இவ்வளவு பெரிய தொகையில் கொடுக்கல் வாங்கல் செய்தால் அது அந்த நாட்டு வங்கி முறைமையிலும் புலனாய்வுப் பிரிவிலும் சிக்காமல் இருக்காது. ஆனால் இதுவரை அத்தகைய எந்த ஆதாரமும் வெளிவரவில்லை.
இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவு வழங்கும் புலம்பெயர் அமைப்புகள் எவ்வளவு பலமாகச் செயற்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்றும் பிரிவினைவாதத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த அமைப்புகள் ராஜபக்ஷவினர் மீது எவ்வளவு வன்மத்தைக் கொண்டுள்ளன? சில மாதங்களுக்கு முன்னர் நாமல் ராஜபக்ஷ ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று உரையாற்ற முற்பட்டபோது அதனைத் தடுப்பதற்கு அந்த விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்கள் எத்கைய போராட்டங்களை நடத்தினார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நினைவிருக்கும்.
ராஜபக்ஷவினரைத் துரத்தித் துரத்தி எதிர்க்கும் அவர்கள் நாமல் அங்கு இவ்வளவு பெரிய சொத்தை வாங்கியிருந்தால் சும்மா இருந்திருப்பார்களா? அதுவும் சட்டவிரோதப் பணமாக இருந்தால் அவர்கள் அதனை முடக்கக் கோரி அந்நாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்க மாட்டார்களா? அவ்வாறான ஒரு தீவிரமான சூழல் நிலவும் நாட்டில் நாமல் ராஜபக்ஷ இவ்வளவு பெரிய சொத்தை வாங்கியதாகக் கூறுவது தர்க்கத்திற்கே அப்பாற்பட்டது.
அநுர அரசாங்கம் ‘நியூஸ் லைன்’ போன்ற பெயர்களில் சமூக ஊடகப் பக்கங்களை உருவாக்கி அதற்கு ஒரு செய்தி நிறுவனத்தின் போலித் தோற்றத்தைக் கொடுத்து இவ்வாறான பொய்களைப் பரப்புகிறது.
இது ஊடகத் தர்மத்திற்கே இழைக்கப்படும் அநீதியாகும். குறிப்பாக அமைச்சர் லால் காந்தவின் வீடு தொடர்பான சர்ச்சை மற்றும் அவருக்கு மட்டும் வீதி காபட் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விடயங்களை மூடிமறைக்கவே தற்போது நாமல் ராஜபக்ஷவின் பெயர் திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுகிறது.
பௌதீகவியல் பட்டதாரியான ஜனாதிபதியும் கலாநிதிப் பட்டம் பெற்ற பிரதமரும் இருக்கும் இந்த கல்விமான்களின் ஆட்சியில் ஒரு பொய்யைக் கூடத் தர்க்கரீதியாகச் சொல்லத் தெரியவில்லை என்பது வேடிக்கையானது.
முன்பு உகண்டாவில் பணம் தங்கக் குதிரைகள் என்று பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றினார்கள். இப்போது மீண்டும் அதையே லண்டன் வீடு என்ற பெயரில் செய்கிறார்கள்.
நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டபோது, அது ஹம்பாந்தோட்டைக்கு எலுமிச்சை ஊறுகாய் கொண்டு செல்லவே என்று ஜே.வி.பியினர் எள்ளிநகையாடினார்கள். ஆனால் இன்று அதே நெடுஞ்சாலைகளின் வருமானத்தைக் கொண்டு இந்த அரசாங்கம் தம்பட்டம் அடிக்கிறது.
பழைய பொய்களை நம்பி ஏமாந்த மக்கள் தற்போதாவது இந்த புதிய மாயைகளில் இருந்து விடுபட வேண்டும். இல்லையெனில் ‘இப்போது மகிழ்ச்சியா?’ என்றுதான் கேட்கத் தோன்றும்.
ராஜபக்ஷவினர் மீது சுமத்தப்பட்டவை அனைத்தும் வெறும் அரசியல் பழிவாங்கல்களே என்பதை நிரூபிக்க நாம் விரைவில் மக்களை அணிதிரட்டுவோம், என்றார்.