நாட்டில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர விசனம் வெளியிட்டுள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயம் நேற்று (12) வெலிக்கடை பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசியல் பயணமானது மிகவும் நம்பிக்கைக்குரியதொன்றாகும். சர்வஜன அதிகாரம் எனும் கட்சியினை நாம் ஆரம்பித்ததே ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து, ஒரு பெரும் நம்பிக்கையுடன் இந்நாட்டில் ஏற்பட்டிருந்த உண்மையான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே ஆகும். இந்த வெற்றிடத்தின் ஊடாக இந்நாட்டுக்கு அநியாயமாக இழக்கப்பட்ட நாட்டின் ஆற்றல்களையும் வளங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், அவ்வாறு கட்டியெழுப்புவதன் மூலம் எமது அன்பிற்குரிய இலங்கை மக்களுக்கு ஒரு சரியான திசையினைக் காட்டுவதற்கும், அதன் வழியே இந்நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதற்கும் நாங்கள் உத்தேசித்துள்ளோம்.
இன்று இலங்கையின் பொருளாதாரம் மாத்திரமல்ல வீழ்ச்சியடைந்துள்ளது; இந்நாட்டின் சமூகமும் கலாசாரமும், வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இன்று நீதித்துறையின் சுயாதீனத்தன்மையும் பலவீனமடைந்து, சீர்குலைந்து போயிருக்கின்றது. இக்கட்டமைப்புக்குள் பணியாற்றுகின்ற சட்டத்தரணிகளும் இந்நாட்டை நேசிக்கின்ற மேன்மையான நீதிபதிகளும் கொண்டுள்ள கருத்து மிகவும் தெளிவானதாகும்.
இந்த நீதித்துறை கட்டமைப்பு குறித்தும், எமது சட்ட ஒழுங்கு குறித்தும், பொலிஸ் துறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் மக்கள் மத்தியில் நிலவுகின்ற நம்பிக்கை மிக வேகமாகச் சீர்குலைந்து வருகின்ற ஒரு காலகட்டத்தையே நாம் தற்போது எதிர்கொண்டிருக்கின்றோம். எனவே, இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அனைவரும் இந்நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு ஒன்றாக ஒன்றிணைய வேண்டும் என்றார்.