ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ‘தமிழ் சமூக நினைவுச் சின்னம்’ (Tamil Community Memorial) திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய பிறைக்குமரன் பேரின்பராசா, தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்டினன்ட் கேணல் தரத்திலிருந்த தனது தந்தையின் வீரம் மற்றும் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்ததுடன், அவரது தைரியத்திற்கும் தியாகத்திற்கும் மதிப்பஞ்சலி செலுத்தினார்.
பேரின்பராசா தனது ஆறு வயதில், தனது தாயார் மற்றும் தம்பியுடன் தமிழீழத்திலிருந்து வெளியேறினார்.
இந்நிகழ்வில் பேசிய பேரின்பராசா:
“தமிழீழக் குழந்தைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த மாவீரர், லெப்டினன்ட் கேணல் அக்பர் என்ற எனது வீரமிக்க தந்தையின் பெயரை நான் தாங்கி நிற்கிறேன்” என்று கூறினார்.
“முள்வேலிகள், அரண்கள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களுக்குப் பின்னால் கழிந்த எனது சிறுபிராயத்தை நான் நினைவு கூர்கிறேன். அது எங்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எந்தவொரு குழந்தையும் அறியக்கூடாத ஒரு குழப்பம் அது. நாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும், எங்களது சுதந்திரம் எவ்வளவு பலவீனமானது என்பதையும் தினசரி நினைவூட்டும் ஒன்றாக அது இருந்தது.
அப்படியிருந்தும், சுதந்திரத்தின் உண்மையான விலையைப் பற்றி நான் நினைக்கும் போது, நான் ஒரு கருத்தியலைப் பற்றி நினைப்பதில்லை, முகங்களைப் பற்றித்தான் நினைக்கிறேன் – மாவீரர்களைப் பற்றித்தான் நினைக்கிறேன்.”
அவரது முழுமையான உரை கீழே:
“என் பெயர் பிறைக்குமரன் பேரின்பராசா. தமிழீழக் குழந்தைகள் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த மாவீரர், லெப்டினன்ட் கேணல் அக்பர் என்ற எனது வீரமிக்க தந்தையின் பெயரை நான் தாங்கி நிற்கிறேன். இங்கு வரையான எனது பயணம் எளிதான ஒன்றாக இருக்கவில்லை. எனது தாயாரின் கைகளைப் பற்றியபடியும், என் தம்பியை என் அருகிலும் வைத்திருந்ததைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிலையில், ஒரு ஆறு வயதுச் சிறுவனாக நான் ஆஸ்திரேலியா வந்தடைந்தேன். எந்த நாடும் இல்லை, எந்தவொரு நிச்சயத்தன்மையும் இல்லை, நாங்கள் மட்டும்தான் இருந்தோம்.
முள்வேலிகள், அரண்கள் மற்றும் கண்காணிப்புக் கேமராக்களுக்குப் பின்னால் கழிந்த எனது சிறுபிராயத்தை நான் நினைவு கூர்கிறேன். அது எங்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எந்தவொரு குழந்தையும் அறியக்கூடாத ஒரு குழப்பம் அது. நாங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும், எங்களது சுதந்திரம் எவ்வளவு பலவீனமானது என்பதையும் தினசரி நினைவூட்டும் ஒன்றாக அது இருந்தது. அப்படியிருந்தும், சுதந்திரத்தின் உண்மையான விலையைப் பற்றி நான் நினைக்கும் போது, நான் ஒரு கருத்தியலைப் பற்றி நினைப்பதில்லை, முகங்களைப் பற்றித்தான் நினைக்கிறேன் – மாவீரர்களைப் பற்றித்தான் நினைக்கிறேன்.
அவர்கள் எங்களது சுதந்திரத்தை வெறும் கொள்கையாக நம்பியவர்கள் மட்டுமல்ல, அதற்காகத் தங்களது இரத்தத்தைச் சிந்தியவர்கள். ஒரு நாளில் நாம் இது போன்றதொரு இடத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காகவே, அவர்கள் நம்பிக்கையைச் சுமந்து போர்க்களங்களில் நின்றார்கள்.
வளர்ந்து வரும் போது, மாவீரர்கள் எனக்கு ஏதோ தூரத்து மாவீரர்களாகத் தெரியவில்லை. தங்களை விடப் பெரிய ஒரு விஷயத்தை (தாயகத்தை) நேசிப்பது என்றால் என்ன என்பதற்கு அவர்கள் ஒரு வாழும், மூச்சுவிடும் நினைவூட்டலாக இருந்தார்கள். என் தந்தை லெப்டினன்ட் கேணல் அக்பர் அந்த அன்பின் வடிவமாகத் திகழ்ந்தார். அளவற்ற துணிச்சலும், அதற்கும் மேலான அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு மனிதர் அவர். அவர் தனது மகன்களுக்காக மட்டும் போராடவில்லை, தலைநிமிர்ந்து, கைகளில் சுதந்திரத்துடன் வளரத் தகுதியுடைய ஒவ்வொரு தமிழ்க் குழந்தைக்காகவும் அவர் போராடினார். போர்க்களத்தில் என் தந்தை காட்டிய வீரம் மற்றும் புகலிடம் தேடிச் செல்லும் போது என் குடும்பம் எதிர்கொண்ட வலிமிகுந்த சகிப்புத்தன்மை ஆகியவையே இன்று நான் உங்கள் முன் நிற்பதற்குக் காரணங்களாகும்.
புலம்பெயர்ந்து வாழும் இளந்தமிழர்களாகிய நமக்கு, நமது அடையாளத்தைக் கையாள்வது என்பது மிகவும் சிக்கலான ஒரு பயணமாகும். வளர்ந்து வரும் போது, போரின் கொடூரமான யதார்த்தமும் தமிழ் இனப்படுகொலையும் பெரும்பாலும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டன. கற்பனை செய்ய முடியாத அதிர்ச்சிகளிலிருந்து தப்பிப்பிழைத்த குடும்பங்கள், சில சமயங்களில் அதை வீட்டில் அமைதியாகவே வைத்திருந்தன. தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஒன்றை நமக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று மட்டுமே அவர்கள் விரும்பினார்கள் – பயமில்லாத ஒரு சிறுபிராயம், பாதுகாப்பு என்பது ஆடம்பரம் அல்ல, அது ஒரு உறுதிமொழி என்பதை உணர்த்தும் ஒரு வாழ்க்கை.
ஆனால் உண்மை என்னவென்றால், நமது மக்கள் எதை அனுபவித்தார்களோ, நமது மக்கள் எதிர்கொண்ட வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் நாம் யார் என்பதை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. என் அம்மா எப்போதும் எங்களுக்கு நினைவூட்டுவது போல், நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இன்று நாம் நிற்கும் இடத்தில் நிற்பதற்கு உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில், கடந்த கால நினைவுகள் இல்லாத ஆசி என்பது துரோகமாகும்.
எனவே, பாதுகாப்பான வலயங்கள் என்று சொல்லப்பட்ட இடங்களுக்குள் மந்தைகளைப் போல் திரட்டப்பட்டு, அங்கேயே படுகொலை செய்யப்பட்ட நூறாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை, தாய்மார்களை, தந்தையர்களை மற்றும் குழந்தைகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவர்கள் பொய்களைக் கூறி ஏமாற்றப்பட்டு, கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
நமது மக்கள் அனுபவித்த துயரங்களால் நமது அடையாளம் சிதைந்துவிடவில்லை. அதிலிருந்தே அது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சோதனைகள், இன்னல்கள் மற்றும் கற்பனை செய்ய முடியாத இழப்புகள் என்பன நாம் மறைக்க வேண்டிய வடுக்கள் அல்ல – அவைதான் நாம் யார் என்பதை உருவாக்கும் உண்மையான காரணிகள்.”