மஸ்கெலியா, மொக்கா தோட்டத்தின் எய்ம்ஸ் பீக் பிரிவில் பணிபுரியும் தோட்ட காவலாளி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தோட்ட உதவி முகாமையாளர், எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பகுதியில் அமைந்துள்ள ஆர்.பி.கோ. (RPC) பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மொக்கா தோட்டத்தின் எய்ம்ஸ் பீக் பிரிவில், கடந்த 5 ஆம் திகதி இரவு இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தோட்ட உதவி முகாமையாளரால் தாம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தோட்ட காவலாளி 6 ஆம் திகதி அதிகாலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட மஸ்கெலியா பொலிஸார், சம்பந்தப்பட்ட உதவி முகாமையாளரை புதன்கிழமை (06) கைது செய்தனர். அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேகநபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.