மலேசிய பயண ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கை குடும்பம் ஒன்றை கஜகஸ்தானுக்கு கடத்த முயன்ற சர்வதேச கடத்தல் வலையமைப்பு ஒன்றை பேங்கொக்கில் உள்ள டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தின் (Don Mueang International Airport) தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
‘காவோசோட்’ (Khaosod) செய்திச் சேவையின்படி, இந்த இலங்கை குடும்பத்தினர் ஆரம்பத்தில் தங்களது சொந்த கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்திற்குள் நுழைந்து, பின்னர் தரைவழியாக மலேசியாவிற்கு பயணித்துள்ளனர்.
பின்னர் இந்த குழுவினர் மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தாய்லாந்திற்குள் நுழைந்துள்ளதுடன், கஜகஸ்தான் நோக்கி பறக்க முயன்றுள்ளனர். இதன்போது அவர்களுடன் வந்த மலேசிய பெண் ஒருவர், அந்த இரு குழந்தைகளினதும் பெற்ற தாய் தான் என போலி உரிமை கோரியுள்ளார்.
இருப்பினும், விமான நிறுவன அதிகாரிகள் அவர்களின் பயண ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்து அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி மறுத்ததை அடுத்து, இந்த குழுவினர் தங்களது வழித்தடத்தை மியான்மருக்கு மாற்றியுள்ளனர். இந்த விடயம் குறித்து குடிவரவு பணியகத்திற்கு அறிக்கை செய்யப்பட்டது.
பின்னொரு நாளில், இந்த குழுவினர் டொன் முவாங் சர்வதேச விமான நிலையம் ஊடாக மியான்மரிலிருந்து கஜகஸ்தான் செல்வதற்கான விமானத்தில் ஏற முயன்ற போது, குடிவரவு அதிகாரிகள் தலையிட்டு அவர்களைக் கைது செய்தனர்.
இலங்கைப் பெண்ணும் மூத்த குழந்தையும் மற்ற நபர்களுக்குச் சொந்தமான மலேசிய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதையும், இளைய குழந்தை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பயணித்திருக்கலாம் என்பதையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மலேசியாவிற்குள் இயங்கி வரும் இந்த குறிப்பிட்ட எல்லை கடந்த கடத்தல் கும்பல் குறித்து ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் சட்ட அமலாக்க முகவர் அமைப்புகள் ஏற்கனவே பிராந்திய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்தக் கடத்தல் கும்பலின் செயல்பாட்டு முறையின் கீழ் (modus operandi), மலேசியாவிற்குள் வெளிநாட்டு குழந்தைகள் கடத்தப்பட்டு, அங்கு மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் பெறப்படுகின்றன. பின்னர் குற்றவாளிகள் இந்த பிறப்புப் பதிவுகளைப் பயன்படுத்தி உத்தியோகபூர்வ மலேசிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கின்றனர், இது அதன் உரிமையாளர்களுக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் உள்ள பல்வேறு இலக்கு நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதியை (visa-free entry) வழங்குகிறது.
பயண ஆவணங்களை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தாய்லாந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் இரு முதிர்ந்த பெண்களையும் கைது செய்துள்ளனர்.
நலன்புரி அதிகாரிகளின் மதிப்பீடுகளைத் தொடர்ந்து, அந்த இரு சிறு குழந்தைகளும் மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்; இரு சிறுவர்களும் தற்காலிக பாதுகாப்புப் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை தூதரகத்தின் ஊடாக அவர்களைப் பாதுகாப்பாக நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தாய்லாந்து அதிகாரிகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.