அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவருவது தொடர்பாக தமிழ் அரசியல் வெளியில் அதிகம் பேசப்படுகின்றது. இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் தீர்வாக எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது தொடர்பாக தமிழர் தரப்பில் காலத்துக்கு காலம் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுவந்துள்ளன.
வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு இத்தகைய முன்மொழிவுகள்தாம். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத் திட்ட வரைபும் குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அரசியல் கட்சிகளுடன் இணைந்து இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆனால், தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் மட்டும் தீர்மானிக்க முடியாது. இதில் பொதுமக்கள் சார்பாக சிவில் அமைப்புகளின் பங்கேற்பும் அவசியம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரவையின் மே தினப் பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டவுடன் தமிழ் மக்களுக்கான ஒரு தேசியத் தலைமை இல்லாமல் போய்விட்டது. யுத்தம் முடிந்து பதினேழு வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்லவல்ல, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பொதுவான தலைமை தமிழ் மக்களிடையே உருவாகவில்லை.
எங்களிடம் இருப்பவர்கள் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமே. இவர்கள் அதிகாரங்களை எப்படிக் கைப்பற்றுவது என்பது பற்றியும், அதிகாரத்துக்கு வந்துவிட்டபின்னர் அதிகாரப்பசி மேலோங்கி பதவிகளில் தாங்கள் எப்படி நீடிப்பது என்பது பற்றியுமே சிந்திக்கிறார்கள்.
தங்கள் கட்சிகளை முதன்மைப்படுத்துவது பற்றியும், அடுத்த தேர்தலில் தாங்கள் எவ்வாறு வெல்வது என்பது பற்றியுமே இவர்கள் யோசிக்கின்றார்கள். இவர்களில் பலர் தமிழ் மக்களுக்கு ஒரு முகமும் அரசுக்கு இன்னொரு முகமும் காட்டி அரசிடம் இருந்து தங்களுக்குத் தேவையான சலுகைகளைப் பெறுவதில் மாத்திரமே குறியாக இருக்கிறார்கள். இதுவே கடந்தகால தமிழர் அரசியல் வரலாறாக உள்ளது.
சிவில் அமைப்புகள் தாங்கள் ஒருபோதும் நேரடியாக அரசியல் அதிகாரத்துக்கு வர விரும்புவதில்லை. அவ்வாறு விரும்பினால் அவை உண்மையான குடிசார் அமைப்புகள் இல்லை. இவற்றின் பணி அரசியல்வாதிகளின் அதிகாரங்களைக் கண்காணிப்பதாகும் .
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்த தமிழ் மக்கள் பேரவை, அதன் இணைத்தலைவர்களில் ஒருவர் கட்சி ஒன்றை ஆரம்பித்ததும் தன் ஆயுளை முடித்துக்கொண்டது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய மக்கள் இயக்கம் இன்று அதே வீச்சுடன் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய குடிசார் அமைப்புகளும் சிதறிப்போய்விட்டது.
இந்த வரலாறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிவில் அமைப்புகள் அல்லது மக்கள் இயக்கங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அதுவும் அரசியல் தீர்வு என்ற முன்னெடுப்புகள் மீண்டும் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் சிவில் அமைப்புகள் இவ்விடயத்தில் தங்கள் வகிபாகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வினைத்திறனுடன் செயலாற்ற முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.