ம. மோகனதாரணி
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் செம்மணி மனிதப் புதைகுழி ஒரு சாதாரண குற்றவியல் சம்பவமாக மட்டும் கருதப்பட முடியாது. அது அரச அதிகாரம் இன அரசியல் உள்நாட்டுப் போர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போருக்குப் பிந்தைய நீதியமைப்பின் தோல்வி ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அரசியல் அடையாளமாகும்.
1948-ல் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை ஒரு ஜனநாயக நாடாக மலர்ந்திருக்க வேண்டிய சூழலில் பெரும்பான்மைவாத அரசியலால் பிளவுபட்டது. சிங்கள தேசியவாதத்தின் எழுச்சியும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளும் தமிழ் மக்களைத் தங்களின் தாயகப் பிரதேசங்களில் அரசியல் பொருளாதார மற்றும் கல்வி உரிமைகளை இழந்தவர்களாக மாற்றியது.
இலங்கையின் இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறியதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக 1956ல் தனிச்சிங்களச் சட்டம் அமைகின்றது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்த இச்சட்டம் இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாகச் சிங்களத்தை மட்டுமே அறிவித்தது. தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டு வந்த இடமும் அரசுப் பணிகளில் தமிழர்களின் பங்களிப்பும் ஒரே நாளில் மறுக்கப்பட்டன. இது தமிழ் மக்களைத் தங்களின் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றிய வரலாற்றுத் துரோகமாகக் கருதப்பட்டது. மொழி உரிமை என்பது பண்பாட்டு அடையாளத்தின் வெளிப்பாடு என்பதால் இச்சட்டம் தமிழர்களிடையே ஆழமான கசப்பை விதைத்தது.
1970-களில் கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட ‘தரப்படுத்தல்’ முறை தமிழர்களின் கல்வி முன்னேற்றத்தைத் திட்டமிட்டு முடக்குவதாக அமைந்தது. குறிப்பாகமருத்துவ மற்றும் பொறியியல் போன்ற உயர்கல்வி வாய்ப்புகளில் திறமையின் அடிப்படையில் அல்லாமல், இன ரீதியாகத் தமிழர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கல்வி ஒன்றையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதுவே ஆயுதப் போராட்டத்திற்கு இளைஞர்கள் திரள்வதற்கு ஒரு மிக முக்கிய உந்துசக்தியாக அமைந்தது.கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதிகளில் அரச ஆதரவுடன் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர்.
வறண்ட வலயப் பகுதிகளில் நீர்ப்பாசனத் திட்டங்களின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட இக்குடியேற்றங்கள் தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் அவர்களின் மக்கள் தொகையின் பரவலையும் சிதைக்கும் நோக்கம் கொண்டதாகத் தமிழர்கள் கருதினர். இது நிலம் சார்ந்த பாதுகாப்பின்மையையும் தங்களின் அடையாளங்களை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தையும் தமிழ் மக்களிடையே உருவாக்கியது.
உள்நாட்டுப் போரும் யாழ்ப்பாணத்தின் இராணுவமயமாக்கலும்
1983 முதல் 2009 வரை இலங்கையில் நீண்டகால உள்நாட்டுப் போர் இடம்பெற்றது. போர்ச்சூழல் ஒருபுறம் இருக்க மறுபுறம் இராணுவத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் மக்கள் வாழ்ந்த அந்தப் பதற்றமான காலகட்டம் ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின்’ வரலாற்றுப் பதிவுகளின் தொடக்கமாக மாறியது.யாழ்ப்பாணக் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றிய பிறகு ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் தொடர்ச்சியான தேடுதல் வேட்டைகள் மேற்கொள்ளப்பட்டன. வீதித்தடைகள் வீடுகளுக்குள் திடீர் சோதனை மற்றும் பொது இடங்களில் இளைஞர்களைத் தடுத்து நிறுத்துதல் போன்றவை அன்றாட நிகழ்வுகளாக மாறின. எவ்வித முறையான குற்றச்சாட்டும் இன்றி யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் இராணுவத்திடம் இருந்தது.
இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியது.கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் அல்லது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்த எந்தத் தகவலும் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. அவசரகாலச் சட்டங்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சித்திரவதை முகாம்களிலும் இராணுவப் படைத்தளங்களிலும் நீண்ட காலம் விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டனர். சட்ட ரீதியான பிணைக்கோ அல்லது வழக்கறிஞர்களின் உதவியோ கிடைக்காத நிலையில் அவர்கள் ‘அரசுச் சிறை’ என்ற இருண்ட குகைக்குள் மறையத் தொடங்கினர்.
இக்காலகட்டத்தின் மிகவும் கோரமான விடயம் ‘காணாமல் போதல்’ ஆகும். கைது செய்யப்பட்ட நபர் இராணுவத் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு பல சந்தர்ப்பங்களில் அவர் மீண்டும் உயிருடன் வீடு திரும்பவில்லை. இராணுவத் தரப்பு குறித்த நபர் தப்பி ஓடிவிட்டதாகவோ அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவோ கூறித் தப்பித்துக் கொண்டனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டதற்கான எந்தப் பதிவோ அல்லது ஆவணமோ இல்லாததால் காணாமல் போனவர்களின் உறவினர்களால் சட்டத்தின் முன் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் போனது. செம்மணி நாவற்குழி போன்ற இடங்கள் மனிதப் புதைகுழிகள் கடத்தப்பட்டவர்கள் எவ்வாறு திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர் என்பதற்கான கசப்பான சாட்சிகளாக மாறியுள்ளன.
செம்மணி விவகாரத்தின் வெளிப்பாடு
1998 ஆம் ஆண்டு ஒரு இராணுவ வீரரின் நீதிமன்ற சாட்சியத்தின் மூலம் செம்மணி உலக கவனத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் கீழ் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. பல மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
செப்டம்பர் 7 1996 அன்று யாழ் சுண்டுக்குளி பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவியான கிருசாந்தி கல்வி நிறுவனத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். கைதடி ராணுவ முகாமிற்கு அவர் வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டதை நேரில் பார்த்த சிலர் அதுகுறித்து அவரது தாயாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கிருசாந்தியைத் தேடி அவரது தாயார் மற்றும் ஒரு உறவினர் ஆகியோர் அந்த ராணுவ முகாமிற்குச் சென்றனர். ஆனால், அங்கு சிங்கள ராணுவ சிப்பாய்களால் மாணவி கிருசாந்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மேலும் அவரைத் தேடிச் சென்ற அவரது தாய் மற்றும் உறவினரும் ராணுவத்தினரால் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இரக்கமின்றித் தேடிக் கொல்லப்பட்டனர். இக்கொடூர படுகொலைகள் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்றக் கேள்விகள் மக்கள் போராட்டங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர் நிர்ப்பந்தங்களால் இந்த விவகாரம் சர்வதேச அரங்கிற்குச் சென்றது.இதனால் உலகளாவிய அழுத்தத்திற்கு உள்ளான அன்றைய அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் அரசு இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற விசாரணையின் முடிவில், சோமரத்தின ராஜபக்சே முதலியசேன ஜெயசிங்க டி.எம். ஜெயதிலகே எஸ்.ஏ. பெரேரா மற்றும் குணசேகர பிரியதர்ஷன ஆகிய ஐந்து ராணுவ சிப்பாய்களுக்கு கொழும்பு நீதிமன்ற அமர்வு மரண தண்டனை விதித்தது. இதில் முதன்மை குற்றவாளியான சோமரத்தின ராஜபக்சே அளித்த வாக்குமூலம், இலங்கை ராணுவ உயர் அதிகாரிகளின் திட்டமிட்ட வன்முறைகளையும் படுகொலைகளையும் அம்பலப்படுத்தியது.
இலங்கையில் இதுவரை பல்வேறு காலகட்டங்களில் 17 மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் அரங்கேறிய போர்க்காலப் படுகொலைகளின் சாட்சியமாகத் திகழும் மனிதப் புதைகுழிகளின் வரிசையில், செம்மணி பகுதி மிக மோசமானதொரு கரும்புள்ளியாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. அதாவது இலங்கையின் மனிதப் புதைகுழி வரலாற்றில் செம்மணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் சதொச புதைகுழி இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படுகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் 28 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 376 மனித எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த 2013ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்த மாத்தளை புதைகுழி நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இருந்து மொத்தம் 155 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி புதைகுழி: புதிய பகுதியிலும் அகழ்வுப் பணி! | Kuruvi
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி 09 நாட்கள் நடைபெற்றது. முதலாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 ஜூன் மாதம் 26ஆம் தேதி தொடங்க, செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்குத் தீவிரமாக நடைபெற்றன.
இந்த முதற்கட்ட அகழ்வாராய்ச்சியின் போது, ஆரம்பத்தில் மீட்டெடுக்கப்பட்ட 19 மனித எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 240 மனித எலும்புத் தொகுதிகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டன.இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 53 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெற்றது.
இப்பணிகள் நடைபெற்ற காலப்பகுதியில் மே மாதம் 9ஆம் தேதி வரை மேலும் 21 மனித எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கப்பட்டன. அதன் பின்னர் இந்த அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.இதன் அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளுடன் சேர்த்து மொத்தம் 261 எலும்புத் தொகுதிகள் இதுவரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வுப் பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு 23.06.2026 வரையிலான 22 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெற்றன. 23.06.2026 அன்று இந்த அகழ்வுப் பணிகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, எதிர்வரும் ஜூலை மாதம் 15 அன்று அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் முதலாம் , இரண்டாம் கட்டங்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தின் இதுவரையிலான 32 நாட்கள் முன்னெடுக்கப்ப அகழ்வு பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது