கடந்த சனிக்கிழமை இரவு நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்து, நால்வர் படுகாயமடைந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த ‘Salsa on St. Clair’ கலை விழா ரத்து செய்யப்பட்டது. லத்தீன் கலாச்சாரத்தைக் கொண்டாடும் ஒரு பெருவிழாவாக அமைந்திருக்க வேண்டிய இந்த நிகழ்வு, துரதிர்ஷ்டவசமாக ஒரு குற்றக்களமாக மாறியுள்ளது.
சனிக்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு, ‘St. Clair Avenue West’ மற்றும் ‘Arlington Avenue’ சந்திப்புக்கு அருகில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, சுமார் 13,000 பேர் அந்த விழாவில் கலந்து கொண்டிருந்ததாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று அங்குள்ள வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன; வியாபாரிகளின் கடைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. காவல்துறை அமைத்திருந்த பாதுகாப்புத் தடைகளுக்குப் பின்னால் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இதுவரை எவரும் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களும், வணிக உரிமையாளர்களும் கடும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் வெளியிட்டுள்ளனர். அத்துடன், இனிவரும் காலங்களில் நடத்தப்படும் விழாக்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, முன்கூட்டியே விழாவை நிறைவு செய்தல் மற்றும் நுழைவாயில்களில் பலத்த பாதுகாப்புப் பரிசோதனைகள் போன்ற தீவிர பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் “நெஞ்சை உலுக்குவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும்” இருப்பதாகத் தெரிவித்துள்ள டொராண்டோ காவல்துறைத் தலைவர் மைரன் டெம்கிவ் (Myron Demkiw), இதற்கு காரணமானவர்களைக் கண்டறிவதில் புலனாய்வாளர்கள் தீவிரமாகச் செயல்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை டொராண்டோவின் புகழ்பெற்ற ‘CN கோபுரம்’ (CN Tower) தனது விளக்குகளை அணைத்து மங்கலாக்கியது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது குறித்த விபரங்கள் அல்லது தகவல்கள் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.