அரச உளவுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் (Cardiology Unit) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுரேஷ் சல்லேக்கு ஏற்கனவே இருக்கும் இருதய நோய் நிலைமை (Heart condition) தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக அவர் இதய சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவர் இன்று (சனிக்கிழமை) இதய சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதுடன், தற்போது நிபுணத்துவ மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இருதயம் சார்ந்த மருத்துவக் குறைபாடு காரணமாக சுரேஷ் சல்லே வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அவரது சட்டத்தரணியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் விவகாரத்தில், தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சுரேஷ் சல்லே மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.