சென்னை:
நீட் தேர்வு மற்றும் இ.டபிள்யூ.எஸ் (EWS) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகன பேரணிக்குத் தவெக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆளும் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திராவிடர் கழகம் சார்பில் இன்று சென்னை வேப்பேரியில் மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இதற்குத் தமிழகக் காவல்துறை அதிரடியாக அனுமதி மறுத்ததுடன், பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டனர். அரசின் இந்தச் செயல் திராவிட இயக்கங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் மற்றும் EWS இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசை விடத் தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது. தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் என மேடைகளில் சொந்தம் கொண்டாடும் தவெக அரசு, தற்போது பெரியார் திடலிலேயே காவல்துறையைக் குவித்திருப்பது ஏன்? திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரை பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதை செய்கிறார்கள்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “கடந்த காலங்களில் இதேபோன்று மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு பல போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய மாபெரும் இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது\” என்று தவெக கொடியின் நிறங்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பாஜக-வின் பிம்பமாகச் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு ஆசிரியர் கி.வீரமணியின் பரப்புரைப் பயணத்திற்கு உரிய அனுமதியைத் தவெக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, தங்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்துப் பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இதனைச் சட்டரீதியாக அணுகுவோம் என்றும், தடையை மீறி மாபெரும் பேரணியை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளார். இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தவெக அரசைக் கண்டித்து, திமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசியல் ரீதியாகத் தவெக அரசுக்கு எதிராகத் திமுக தற்போது தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது அரசியல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.
#MKStalin #TVK #CmVijay #DravidarKazhagam #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #PeriyarThidal #DmkNews #PoliticalUpdate #NEETProtest #TamilNewsLive