முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணையை ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை மேற்கொள்ளவதாக பிரதம நீதியரசர் இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் 3ஆம் தரப்பு யாராவது தெரிவிப்பதாக இருந்தால், அது பிரதம நீதியரசரின் அதிகாரத்தின் மீது தலையிடுவதாகும் என்பதுடன் சட்டத்தை மீறும் செயலாகும் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசில் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில் எமது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் மிகவும் முக்கியமான வழக்குகளை அதன் முக்கியத்துவம் கருதி அந்த வழக்கு விசாரணையை விசேட சிறப்பு விசாரணையாக ரயல் அட்பார் முறையில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மாத்திரமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை 3ஆவது தரப்பு கையில் எடுப்பதற்கு முயற்சிக்குமானால் அது முற்றாக சட்டத்தை மீறும் செயலாகும்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணையை இவ்வாறு சிறப்பு விசாரணையாக மேற்கொள்ளப்போவதாக ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இவ்வாறு சிறப்பு விசாரணைமேற்கொள்வதாக பிரதம நீதியரசர் இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கவில்லை. அவ்வாறு 3ஆம் தரப்பு யாராவது தெரிவிப்பதாக இருந்தால், அது பிரதம நீதியரசரின் அதிகாரத்தின் மீது தலையிடுவதாகும். அது பிரதம நீதியருக்கு செய்யும் அகெளரவமாகும்.
அத்துடன் வழக்கு விசாரணைகளின்போது ஒருவருக்கு குற்றப்பத்திரம் கையளிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரமே இருக்கிறது. சட்டமா அதிபர் அதனை தீவிரமாக ஆராய்ந்து, சுயாதீனமாக பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் எந்த அழுத்தங்களும் அவருக்கு இருக்கக்கூடாது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலையில் இருக்கும்போது சுகயீனமுற்ற நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு எமது நாட்டில் இருக்கும் உயர் பதவிகளில் இருக்கும் சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் 7பேர் சிகிச்சை வழங்கி, அவரின் சுகாதார நிலைமை தொடர்பில் அறிக்கை வழங்கி இருந்தனர்.
ஆனால் அறிக்கை வழங்கிய இந்த விசேட வைத்திய நிபுணர்கள் 7 பேரும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். தொழில் ரீதியாக அவர்கள் தங்களது கடமையை செய்ததனால், இறுதியில் அவர்கள் பாரிய குற்றம்
செய்தவர்கள்போல் குற்றப்புலனாய்வுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். இதனால் அந்த வைத்தியர்கள் பெரும் அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.
நாட்டில் இருக்கும் சிறந்த வைத்திய நிபுணர்கள் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுவதை விரும்பாத ரணில் விக்ரமசிங்க, சுயமாக தீர்மானித்து, சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார். இவ்வாற நிலை தொடருமானால்
நாட்டில் இருக்கும் விசேட வைத்திய நிபுணர்கள், பிரபலமான அரசியல் தலைவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு முன்வரமாட்டார்கள். இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.
அதனால் நாட்டில் இருக்கும் சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள் எந்த அழுத்தங்களுக்கும் உட்படாமல் தங்களின் கடமையை செய்யக்கூடிய நிலைமை இருக்க வேண்டும்.
நாட்டில் சிறந்த வைத்தியர்கள் இருக்கும்போது ரணில் விக்ரமசிங்க ஏன் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என நாட்டுக்குள் பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டு வருவதால், நாட்டு மக்கள் இதன் உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கே இந்த விடயங்களை தெரிவிக்க தீர்மானித்தோம் என்றார்.