‘அரகலய’ போராட்டக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று (30) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் தான் காயமடைந்ததாகக் கூறி தனபாலசிங்கம் சுதாகரன் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டது.
இதன்போது நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த அரச சட்டத்தரணி, இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய 54 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவராக இந்த மனுதாரரும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த விசாரணைகள் தொடர்பான சில கோப்புகளை பொலிஸார் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிப்பதற்கு ஒரு திகதியை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹர்மிசா டீகல், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த மனுவை மீண்டும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்ட மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அன்றைய தினம் இது தொடர்பான முன்னேற்றங்களை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு கட்டளையிட்டது.