இலங்கையின் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியும் இலக்கிய விழாவும் – 2026 மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பு இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் குலதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த நாற்பது ஆண்டுகளில் டிஜிட்டல் ரீதியிலான கவனச்சிதறல்கள் காரணமாக இலங்கையின் வாசிப்பு கலாசாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனை மீளக்கட்டியெழுப்பும் நோக்கோடும், இலங்கையை தெற்காசியாவின் சிறுவர் இலக்கிய மையமாக மாற்றும் கனவோடும் இந்த கண்காட்சியை நாங்கள் முதன்முறையாக முன்னெடுக்கிறோம். இது வெறும் புத்தக விற்பனை சந்தையாக மாத்திரமன்றி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இலக்கிய விழாவாகவும் அமையும். மார்ச் 24 முதல் 29 வரை காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை இக்கண்காட்சி பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
இந்த விழாவின் மற்றுமொரு முக்கிய அங்கமாக புத்தக தானத் திட்டம் அமையும். இதன் மூலம் சபரகமுவ மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் உட்பட மொத்தம் 165 பாடசாலை நூலகங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. வாசிக்கும் தேசமே தலைமைத்துவம் வழங்கும் தேசமாக மாறும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
எனவே, எமது எதிர்கால சந்ததியினரின் அறிவுப் பசியைத் தீர்க்கும் இந்த மகத்தான முயற்சிக்கு ஊடகங்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் பொதுச்செயலாளர் லசித உமகிலிய தெரிவிக்கையில்,
சுமார் 26 ஆண்டுகளாக கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியையும், 20 ஆண்டுகளாக கண்டி புத்தகக் கண்காட்சியையும் வெற்றிகரமாக நடாத்தி வரும் எமது சங்கம், தற்போது சிறுவர்களுக்கென பிரத்யேகமாக இந்த சர்வதேச விழாவை வடிவமைத்துள்ளது.
சர்வதேச சிறுவர் புத்தக தினமான ஏப்ரல் 2ஆம் திகதிக்கு இணைவாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உலகத்தரம் வாய்ந்த இலக்கியங்களை ஒரே கூரையின் கீழ் எமது பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
நிகழ்வின் சிறப்பம்சங்கள் குறித்து ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தீபால் மொராயஸ் விளக்குகையில்,
இங்கு புத்தகக் கண்காட்சிகளுடன் இணைந்து கதை சொல்லும் அமர்வுகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகள், ஆக்கத்திறன் பயிலரங்குகள் மற்றும் பல்வேறு போட்டிகள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையிலான சந்திப்பு எனும் தொனிப்பொருளில் சுகாதார விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.
அத்தோடு, பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை கல்வி கற்பதற்கு உதவும் வகையில் 20 சிறுவர்களுக்கு தருதிரிய புலமைப்பரிசில் திட்டமும் இங்கு அறிமுகப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டினார்.
இந்த பாரிய தேசிய முயற்சிக்கு இலங்கையினது முன்னணி நிறுவனங்கள் பல கைகோர்த்துள்ளன. இம்முறை கண்காட்சியினது பிரதான அனுசரணையாளராக எம். டி. குணசேன நிறுவனம் செயற்படுகின்றது. பிளாட்டினம் அனுசரணையாளர்களாக அகுரா, ரத்பிய , ஐ.பி.எம்.சி. , சமுத்ரா, சுபஹா மற்றும் ஜுபெரி ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. தங்க அனுசரணையாளர்களாக இமாஷி, ஜோன் கீல்ஸ் மற்றும் தயாவன்ச ஜெயகொடி ஆகிய நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன.
அத்தோடு, இக்கண்காட்சியினது சிறுவர் செயற்பாட்டுப் பங்காளராக புக் ஸ்டுடியோமற்றும் இலக்கிய விழாப் பங்காளராக ரூம் டு ரீட் அமைப்பும் செயற்படுகின்றன. அச்சு ஊடகப் பங்காளராக வீரகேசரி மற்றும்மிதின ஆகிய நாளிதழ்கள் செயற்படுவதுடன், இலத்திரனியல் ஊடகப் பங்காளராக சேனல் ஒன், ஏ பிளஸ் மற்றும் பாக்ஸ் வானொலி போன்றனவும், உபசரிப்பு பங்காளராக மெக்கீன் நிறுவனமும் இணைந்துள்ளன.
இலங்கையின் சிறுவர் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையவுள்ள இந்த சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியானது, சிறுவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டுவதோடு, அவர்களிடையே சமூக நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பாலமாக அமையும் என நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதிதிகள் நம்பிக்கையினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.