சென்னை
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வியடைந்தது தமிழக அரசியல் களத்தில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் எனத் திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று, இன்று முழுமையாக நிறைவடைந்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியை நேரில் பார்வையிட்ட திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 14 இயந்திரங்களில் 5 இயந்திரங்களின் செயல்பாடுகள் மிகுந்த சந்தேகத்திற்கு இடமாக உள்ளன. 2 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை, மற்றொரு இயந்திரத்தில் மு.க.ஸ்டாலின் பெயர் இருந்தும் அது அங்கீகரிக்கப்படவில்லை; இது பழுது எனப் பொறியாளரும் ஒப்புக்கொண்டுள்ளார். 30 சதவீத வாக்கு இயந்திரங்கள் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதால், இது குறித்து நிச்சயமாக நாங்கள் மீண்டும் வழக்குத் தொடருவோம். இது இந்தியாவிலேயே முதல் வழக்காக அமையும்” என அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் திமுகவின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு முற்றிலுமாக மறுத்துள்ளார். “தேர்தல் ஆணையம் எந்தத் தவறும் நடக்கவில்லை எனத் தெளிவான தீர்ப்பைக் கொடுத்துவிட்டது. திமுகவின் வீணான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எந்தக் குறைபாடும் இல்லை என்பதை மக்களும் தொண்டர்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த மாபெரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சமீரன் திட்டவட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் சீட்டுகள் சரிபார்ப்பில் எந்தவித முரண்பாடும் இன்றி அனைத்தும் மிகச் சரியாக இருப்பது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உடனுக்குடன் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட அனைத்து இயந்திரங்களும் தேர்தல் ஆணைய நடைமுறைகளின்படி மிகச் சரியாகச் செயல்படுகின்றன என பெல் (BEL) நிறுவனப் பொறியாளர்களால் அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்பட்டுள்ளது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்!
#KolathurConstituency #MKStalin #ThalapathyVijay #TVKGovernment #EVMControversy #VSBabu #ElectionCommission #TamilNaduPolitics #TNPolitics #Chennai #DMKvsTVK #ViralNews #TamilNews #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdatesTN #TamilNaduNews #EVMHacking #Election2026