இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து தரைமட்டமாக்கியுள்ளமைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,
“தோட்டங்களில் பாதுகாப்புக் கடமைகளுக்கென பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு வந்த சில இனந்தெரியாத நபர்களே, இவ்வாறு வீட்டை அடித்து உடைத்துள்ளனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் குறித்துக் காவத்தை தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ள செந்தில் தொண்டமான், அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக இ.தொ.கா கடும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க இ.தொ.கா வலியுறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.