பொகவந்தலாவையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி பிரதான வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நோர்வூட் நியொலிகம பகுதியில் உள்ள ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (16) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
வேகமாகச் சென்றுகொண்டிருந்த கார், சறுக்கிச் சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக் கம்பத்தில் மோதியுள்ளது.
விபத்தில் சிக்கியது ஒரு வாடகைக் கார் என்றும் அந்தக் காரில் 2 பேர் பயணம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேகம் மற்றும் கார் சறுக்கியதே விபத்துக்குக் காரணம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பிரதான வீதிகளில் சாரதிகள் எச்சரிக்கையுடனும் மிகுந்த கவனத்துடனும் வாகனங்களை மெதுவாக, கட்டுப்பாட்டுடன் இயக்கவேண்டும் என நோர்வூட் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், புதிதாக வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் வீதிகளின் நிலைமை குறித்து முன்கூட்டியே அறிந்துகொண்டு பயணம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.