கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாநிலத்தில் உள்ள அபோட்ஸ்ஃபோர்ட் (Abbotsford) நகரில், தாம் கனடா வந்து சேர்ந்த ஆறாவது நாளிலேயே மனைவியைக் குத்திக் கொலை செய்த நபருக்கு இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (second-degree murder) நிரூபிக்கப்பட்டு தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது மனைவியாக இருந்த 41 வயதுடைய பல்விந்தர் கவுர் என்பவரை, கடந்த 2024 மார்ச் 15 அன்று கொலை செய்த குற்றத்திற்காக ஜக்பிரீத் சிங் என்பவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
பல்விந்தர் கவுர் தனது வீட்டின் அடித்தளப் பகுதியில் (basement suite) பலத்த கத்திகுத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட ஏழு பாரதூரமான காயங்கள் காரணமாக அதிகளவில் இரத்தம் வெளியேறியதே அவரது மரணத்திற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மனைவிக்கு காயங்களை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்ட ஜக்பிரீத் சிங், திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தூண்டுதல் காரணமாகவே தான் அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறி, தனக்குக் கொலைக் குற்றத்திற்குப் பதிலாக ‘சதி இல்லாத மனிதக்கொலை’ (manslaughter) தண்டனையே வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
எனினும், ஜக்பிரீத் சிங்கின் சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை எனக் கூறி அந்த வாதத்தை நிராகரித்த பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்ற நீதிபதி ஆண்ட்ரியா ஓர்மிஸ்டன், மனைவியைக் கொல்லும் நோக்கம் அவருக்கு இருந்ததா என்ற சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்தார்.
பல்விந்தர் கவுர் 2022 ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் வசித்து வந்ததுடன், அவர் செய்த விசா விண்ணப்ப உதவியின் மூலமாகவே ஜக்பிரீத் சிங் 2024 மார்ச் 9 அன்று இந்தியாவிலிருந்து கனடாவை வந்தடைந்திருந்தார்.
இவற்றுக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. மனநல மதிப்பீட்டிற்குப் (psychiatric assessment) பிறகு, ஜக்பிரீத் சிங் அக்டோபர் 19 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.