கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) அதிகாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, அங்கு தரையிறங்க வந்த 09 விமானங்கள் மத்தல விமான நிலையத்திற்கும், இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி விடுத்துள்ள அறிவிப்பின்படி, நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மத்தல விமான நிலையத்திற்கு 06 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
கத்தார் எயார்வேஸ்: தோஹாவிலிருந்து அதிகாலை 2.35 மணிக்கு வந்த QR-658 மற்றும் அதிகாலை 3.45 மணிக்கு வந்த QR-662 ஆகிய 02 விமானங்கள்.
எயார் அரேபியா: ஷார்ஜாவிலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு வந்த G9-587 மற்றும் அதிகாலை 4.00 மணிக்கு வந்த G9-502 ஆகிய 02 விமானங்கள்.
இத்திஹாட் எயார்வேஸ்: அபுதாபியிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு வந்த EL-394 விமானம்.
ஜசீரா எயார்வேஸ்: குவைத்திலிருந்து அதிகாலை 4.45 மணிக்கு வந்த T9-551 விமானம்.
மேலும் 02 விமானங்கள் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி, துபாயிலிருந்து அதிகாலை 4.45 மணிக்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்வேஸின் RL-226 விமானமும், சென்னையிலிருந்து அதிகாலை 3.20 மணிக்கு வந்த இண்டிகோ நிறுவனத்தின் 6E-1171 விமானமும் கொச்சின் நோக்கி அனுப்பப்பட்டுள்ளன.
அதேவேளை, புதுடில்லியிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்கவிற்கு வருகை தந்த எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 விமானம், மீண்டும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.