கடந்த ஓராண்டிற்கு முன்னர் வடக்கு சஸ்காச்சுவான் (Saskatchewan) பகுதியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட ஒன்ராறியோவைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச்சம்பவத்தை ஒரு கொலை வழக்காகக் கருதி ஆர்.சி.எம்.பி (RCMP) காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒன்ராறியோவின் பிராம்ப்டன் (Brampton) நகரைச் சேர்ந்த 16 வயதான ஜேசியா வெப்-லாங் (Jay’siiah Webb-Long), கடந்த 2025 ஆம் ஆண்டு மே 16 அன்று இறுதியாகத் தனது குடும்பத்தினருடன் பேசியிருந்தான்.
ஆர்.சி.எம்.பி விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, சஸ்காடூன் (Saskatoon) நகரில் இருந்து வடகிழக்கே 500 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் உள்ள ‘பெலிகன் நெரோஸ்’ (Pelican Narrows) என்ற தொலைதூரக் கிராமப்புறப் பகுதியில் வெப்-லாங் அக்காலப்பகுதியில் வசித்து வந்துள்ளான்.
அவனது குடும்ப உறுப்பினர்கள் பின்னர் ஒன்ராறியோவின் பீல் பிராந்திய காவல்துறையிடம் (Peel Regional Police) சிறுவன் காணாமல் போனதாகப் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து, 2025 ஜூலை மாதத்தில் சஸ்காச்சுவான் ஆர்.சி.எம்.பி இன் பாரிய குற்றப் புலனாய்வுப் பிரிவு (Major Crimes Unit) இந்த விசாரணையைத் தன்வசப்படுத்தியதுடன், சிறுவனின் காணாமல் போதலில் மர்மம் இருப்பதாகக் கருதியது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தேடுதல் வேட்டையின் போது மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடற்கூறாய்வுப் பரிசோதனையின் (Autopsy) பின்னர் அது வெப்-லாங்குடையது தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். இதனை ஒரு கொலைச் சம்பவமாக காவல்துறை அறிவித்துள்ளது.
சிறுவனின் குடும்பத்தினருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பாதிக்கப்பட்டோருக்கான உதவிச் சேவைகள் (Victim services) வழங்கப்பட்டு வருவதாக ஆர்.சி.எம்.பி தெரிவித்துள்ளது.
இக்குற்றச்சம்பவம் தொடர்பான ஆதாரங்களைத் தேடும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் புலனாய்வாளர்கள், இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் சஸ்காச்சுவான் ஆர்.சி.எம்.பி காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) ஊடாக ரகசியமாகத் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.