ஒட்டாவா குடியிருப்புப் பகுதி ஒன்றில் பாரிய பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் நிலவி வந்த பிணைக்கைதி விவகாரம், 14 மணித்தியாலங்களுக்கும் மேலான இழுபறி நிலையின் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.
ஒட்டாவா, ‘பின்லேசன் கிரசென்ட்’ (Finlayson Crescent) பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை காலை பொலிஸார் அங்கு விரைந்ததாக ஒட்டாவா பொலிஸ் சேவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“14 மணித்தியாலங்களுக்கும் மேலாக, பொலிஸ் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையாளர்களும் (negotiators) நிலைமையை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் பணியாற்றினர்,” என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணியளவில் அதிரடிப் படையினர் (tactical unit) அந்த வீட்டிற்குள் நுழைந்து, பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
அப்பெண்ணுக்கு எந்தவொரு உடல் ரீதியான காயங்களும் ஏற்படவில்லை என்றும், தற்சமயம் அவருக்குத் தேவையான உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிராபத்து இல்லாத காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படவுள்ளன.
இப்பாதுகாப்பு நடவடிக்கையின் போது பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, விசேட புலனாய்வுப் பிரிவிற்கும் (Special Investigations Unit – SIU) இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.