அமெரிக்காவின் ஒக்லஹோமா (Oklahoma) மாகாணத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கான விருந்துபசார நிகழ்வில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எட்மண்ட் (Edmond) காவல் துறையின் ஊடகப் பேச்சாளர் எமிலி வார்டு (Emily Ward) தெரிவிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அர்காடியா ஏரிக்கு (Arcadia Lake) அருகிலுள்ள ஒரு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. ஒக்லஹோமா நகரத்திலிருந்து சுமார் 21 கி.மீ (13 மைல்) தொலைவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை.
“இது மிகவும் அச்சமளிக்கும் ஒரு சூழலாகும். பொதுமக்கள் மற்றும் இதில் பாதிக்கப்பட்டவர்களின் கவலையை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. சந்தேக நபர்களைக் கண்டறிய நாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம்,” என எமிலி வார்டு தெரிவித்தார்.
முக்கிய தகவல்கள்:
-
காயமடைந்தவர்களில் 10 பேர் அவசர சிகிச்சை வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மற்றவர்கள் தாமாகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
-
பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு நிலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் ஒன்பது பேர் ஒக்லஹோமா சிட்டியிலும், மூவர் எட்மண்ட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
ஒக்லஹோமா நகருக்கு வடக்கே அமைந்துள்ள அர்காடியா ஏரி, மீன்பிடித்தல், படகு சவாரி மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடமாகும்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, எட்மண்ட் பகுதியில் தபால் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். இது அமெரிக்க வரலாற்றில் பணியிடங்களில் நிகழ்ந்த மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.